Sun. May 5th, 2024

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இந்த விழாவின் சிறப்பம்சமாக, 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆராட்டு விழா நடக்கிறது. இதனையொட்டி, சன்னிதானத்தில் இருந்து உற்சவர் சுவாமியை யானை மீது ஏற்றி, ஐந்துமலை இறங்கி, பம்மை நதிக்கரையை உற்சவர் வந்தடைவார். கங்கைக்கு இணையான புண்ணிய நதியான பம்மையில். உற்சவருக்கு தீர்த்தவாரி நடைபெறும். இதில், ஐயப்ப பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந்தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாத பூஜையின் தொடர்ச்சியாக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்

முன்னதாக காலை 7 மணிக்கு கொடி பூஜை, தந்திரி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து 28-ந்தேதி வரை 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.,

இன்று நண்பகரில் சபரிமலையில் மிதமான மழை பெய்தது. 30 நிமிடத்திற்கு மேலாக மழை பெய்தபோதும், உத்சவ பலி பூஜை தடையின்றி நடைபெற்றது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னின்று சிறப்பு பூஜையை நடத்தினார்.

27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.

பின்னர், அன்று மாலை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். அதை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழா நாட்களில் 28-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏப்ரல் மாதம் 10-ந் தேதி திறக்கப்படும்.