Sat. Apr 27th, 2024

அதிமுகவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வரும் உட்கட்சி மோதல்கள் குறித்து நல்லரசுவில் ஒரு செய்தி கூட பதிவு செய்யப்படவில்லை. அதற்கு முக்கிய காரணம், இன்றைக்கு அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பூகம்பத்திற்கான நெருப்பு, பல மாதங்களுக்கு முன்பே பற்ற வைக்கப்பட்டுவிட்டது என்பதை நல்லரசு ஏற்கெனவே பகிரங்கமாகவே போட்டு உடைத்து விட்டது என்பதுதான்.

அதிமுகவில் ஓபிஎஸ்ஸை டம்மியாக்கிவிட்டு தனிப்பெரும் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமியின் நீண்ட கால கனவு. ஆட்சியை பறிகொடுத்த நாளில் இருந்தே அதற்கான திட்டத்தை வகுத்து செயல்பட்டு வந்த எடப்பாடி பழனிசாமி, நாளை நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் அந்த இலக்கை என்ன விலை கொடுத்தாவது நிச்சயம் எட்டிவிடுவார் என்று உறுதிபட தெரிவிக்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகம் பக்கமோ அல்லது அதிமுக முன்னணி தலைவர்களின் வீடுகள் பக்கமோ மழைக்கு கூட ஒதுங்காத நல்லரசு, கடந்த ஓராண்டுக்கு மேலாக பதிவு செய்து வந்த பல்வேறு கட்டுரைகளில் இபிஎஸ்தான், அதிமுகவின் அதிகாரமிக்க தலைவராக உருவெடுப்பார் என்பதை அந்தந்த காலத்தில் முக்கிய பிரமுகர்களிடையே ரகசியமாக பேசப்பட்டுவந்த தகவல்களை சேகரித்து வெளியிட்டிருக்கிறது.

கடந்த ஒரு வருடத்தில் பல கட்டுரைகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தாலும் முத்தாய்ப்பாக மூன்று கட்டுரைகளில் என்னென்ன தகவல்களை பகிர்ந்திருந்தோமோ அவைதான் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அதுவும் இபிஎஸ்ஸின் 5 மாத திட்டம்தான் ஹை லைட்…

அதிமுகவில் என்ன நடக்கும் என்பதை பார்வையாளர் நிலையில் இருந்து கணித்த நல்லரசுவுக்கு இணையாக என்று சொல்வதைவிட, அதில் பத்து சதவீதம் கூட யோசிக்காமல் வெறும் மிக்சரை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு காலத்தை ஓட்டி வந்த ஓபிஎஸ்ஸுக்கு கூடை கூடையாக அல்வாவை கொடுத்திருக்கிறார் இபிஎஸ்.

அரசியல் சதுரங்க விளையாட்டில் வெற்றி தான் முக்கியம். அதில் கில்லியாக தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி….