Mon. May 6th, 2024

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி தொகுதியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸடாலின் என்ற நிகழ்வில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவJ:

இதுவரையில் நான் 4 கூட்டங்கள் முடித்து 5-வது கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். எல்லாக் கூட்டங்களையும் விஞ்சும் அளவிற்கு இந்த திருவள்ளூர் மாவட்டம் – பூந்தமல்லி தொகுதியில் மிகவும் கட்டுப்பாடாக – அமைதியாகக் கலந்து கொண்டிருக்கிறீர்கள்.

இப்போது உங்கள் மனுக்கள் அனைத்தும் இந்தப் பெட்டியில் போடப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியைப் பூட்டி, சீல் வைத்து நான் எடுத்துச் செல்லப்போகிறேன். அந்தச் சாவி என்னிடம் தான் இருக்கப்போகிறது.விரைவில் தேர்தலைச் சந்திக்கப்போகிறோம். அந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் திராவிட முன்னேற்றக் கழகம் பெறப்போகிறது.

நான் 200 தொகுதிகள் என்று சொன்னேன். ஆனால் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறப்போகிறோம் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உருவாகி இருக்கிறது.அவ்வாறு ஆட்சிக்கு வந்த பிறகு, மு.க.ஸ்டாலின் ஆகிய நான் என்று பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளப் போகிறேன். அந்தப் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்ட மறுநாள் இந்தப் பெட்டியை நான் தான் திறப்பேன்.அதற்குப்பிறகு அந்த மனுக்களில் இருக்கும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு ஒரு தனி இலாகா உருவாக்கப்படும். இந்த மனுக்கள் மாவட்ட வாரியாகப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, 100 நாட்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம் என்று அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்கிறேன்.

இந்த ஸ்டாலினை நம்பியும், திராவிட முன்னேற்றக் கழகத்தை நம்பியும், கைகளில் மனுக்களோடு இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை என்னுடைய இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவவாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.