Thu. Apr 25th, 2024

கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர் புகழேந்தி……

தமிழில் இன்று கிடைக்கும் நூல்களில் தொல்காப்பியமே மிகப் பழமையானதாகும். தொல்காப்பியத்தில் மரங்களைப் பற்றிய செய்திகள் மிகுதியாக உள்ளன.

மாமரம், புளியமரம், ஒடுமரம், சேமரம், விசைமரம், பனை, இல்லம், ஆல், வேல் முதலிய மரங்களுக்கு எழுத்து அதிகாரத்தில் புணர்ச்சி விதி கூறியுள்ளார் தொல்காப்பியர். “தெய்வம், உணாவே, மா மரம், புள், பறை செய்தி, யாழின் பகுதியொடு தொகை-இ அவ்வகைபிறவும் கருவெனமொழிப”என்று கருப்பொருள் பற்றிக் கூறும் போது ஒவ்வொரு திணைக்கும் மரம் உண்டு என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

குறிஞ்சி மரத்தாலும் குறிஞ்சிப் பூவாலும் குறிஞ்சித் திணை என்றும், முல்லைச் செடியாலும் முல்லைப் பூவாலும் முல்லைத்திணை என்றும், மருத மரத்தாலும், மருதப் பூவாலும் மருதத்திணை என்றும், நெய்தல் செடியாலும் நெய்தல் பூவாலும் நெய்தல் திணை என்றும், பாலை மரத்தாலும் பாலைப் பூவாலும் பாலைத்திணை என்றும் தாவரங்களால் ஐந்திணைகள் பெயர் பெற்றன.

பழங்குடி மக்களிடையே மரபுச்சின்னங்கள் இருந்துள்ளன. பெரும்பாலும் மரங்களே குல மரபுச் சின்னங்களாக அமைந்துள்ளன. தமிழ் நாட்டு மூவேந்தரில் சேரர்க்குப் பனையும், சோழருக்கு ஆத்தியும், பாண்டியர்க்கு வேம்பும் அவ்வாறு குலமரபுச் சின்னங்களாக அமைந்தவையே ஆகும்.சங்க இலக்கியங்களில் பனை மரம், காவல் மரம் முதலியன குறிக்கப் பெறுகின்றன.

ஊர்ப்பொதுவில் மக்கள், மரத்தின் நிழலில் அமைந்த மேடையிலேயே கூடி ஊர்க்காரியங்களை ஆய்ந்தனர். மரங்களில் தெய்வம் இருப்பதாக நம்பினர். பொதுவிடமான மன்றத்தில் உள்ள கடம்பு மரத்தில் அச்சத்தைச் செய்யும் வல்லமையில் முதிர்ச்சிமிக்க தெய்வம் கொடியவர்களை வருத்தும் என்று அறிந்தோர் கூறுவர் என்பதனை “மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப”என்ற குறுந்தொகைப் பாடற்பகுதி குறிப்பிடுகின்றது.

மன்ற பொதுவிடம், மரா – கடம்பு மரம், மராஅத்த – கடம்பு மரத்தில் உள்ள, பே – அச்சம், தெறூஉம் -வருத்தும்.‘நல்லரை மராஅத்த கடவுள்’ என்று மலைபடுகடாம் சுட்டுகின்றது. மரங்களில் தெய்வம் உள்ள செய்தி சங்க இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றது. மரத்தின் அடியிலும் தெய்வத்தை அமைத்து வழிபடுவதும் உண்டு.

கள்ளி நீழற்கடவுள் வாழ்த்தி (புற நானூறு 260) என்ற செய்தியையும் காணலாம். மரத்தையே நட்டுத் தெய்வமாக வழிபட்டனர். கந்துடை நிலை என்று அதனைக் குறிப்பிட்டனர். கந்துடை நிலை, கந்துத் தறி என்பனவே பின்னர் சிவலிங்கம் ஆயிற்று.மரங்களின் மிகுதியால் கடம்பவனம், தில்லைவனம், ஆலங்காடு, மாங்காடு என்று அந்தந்த மரத்தால் பெயர் வழங்கலாயிற்று. கடம்பவனம்-மதுரை-இன்றும் மதுரைத் கோவிலில் தலமரம் கடம்ப மரமே. தில்லைவனம் – சிதம்பரம் – தில்லை மரமே சிதம்பரத்தின் தலமரமாகும்.

தில்லைச் சிற்றம்பலம் என்பது தேவார வழக்கு. மரம் அடர்ந்த காடாக இருந்து பின் ஊரானபோது அவ்வாறு பெயர் ஏற்பட்டிருக்கும்.மரத்தின் அடியில் தான் முதலில் தெய்வத்தை வழிபட்டனர். பின் கோவில்கட்டி வழிபட்ட போது மரத்தைக் கோவிலில் அமைத்தனர். அதுவே தலமரம் எனப் பெயர் பெற்றது.காஞ்சிபுரத்தில் மாமரம் மிகப் பழமையானதாகும். மாமரத்தின் கீழ் இருப்பதனால் இறைவனுக்கு மாமூலர் என்று பெயர்.

சங்க காலத்தில் மாமூலனார் என்ற பெயரில் புலவர் ஒருவர் உள்ளார். பிறகாலத்தில் வடமொழியில் ஏகாம்பரம் என்று அழைக்கப்பட்டது. இப்பெயரே, ஏகம்-ஒற்றை, ஆம்பரம்-மாமரம். ஒற்றை மாவின் கீழ் உள்ளார் என்ற பொருளில் ஏகாம்பரர், ஏகம்பர நாதர் என வழங்கலாயிற்று. இன்றும் மாமரமே அங்கு தலமரமாகும். திருவானைக்காவில் நாவல் மரம் தலமரமாகும் நாவல் மரத்தின் கீழிருந்த இறைவனைச் சிலந்தியும், யானையும் பூசித்தன. மரத்திலிருந்து சருகுகள் விழாமல் சிலந்தி நூலிழைத்துப் பந்தலாக அமைத்து வழிபட்டது.

யானை நாள்தோறும் காவிரியில் நீராடி துதிக்கையில் நீரைக் கொணர்ந்து திருமஞ்சனம் ஆட்டியது.யானையால் சிலந்திக் கூட்டுப் பந்தல் சிதைந்தது. மீண்டும் சிலந்தி பந்தல் அமைத்தது. அடுத்த நாளும் யானை வந்து நீர்விட்டு வழிபட்ட போது சிலந்திக் கூட்டுப் பந்தல் அழிந்தது. கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையின் துவாரத்தினுள் புகுந்தது, யானை கீழே விழுந்து துதிக்கையை நிலத்தில் அடித்துக்கொண்டு இறந்தது. சிலந்தியும் இறந்தது.

யானைக்கு முத்தி கொடுத்துச் சிலந்தியை அடுத்த பிறப்பில் சோழர் மரபில் பிறக்குமாறு செய்தான் இறைவன். அவ்வாறு பிறந்த மன்னனே கோச்செங்கட் சோழன் ஆவான். திருக்கோவில் பணிகள் பல செய்தான். “சிலந்தியும் ஆனைக் காவில் திரு நிழல் பந்தர்செய்து உலந்தவண் இறந்த போதே கோச்செங்கோணானும் ஆகக் கலந்த நீர்க் காவிரி சூழ்சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித்திட்டார் குறுக்கை வீரட்டனாரே”என்பது தேவாரப் பாடல்.

வெண்ணாவல் மரத்தின் கீழிருந்ததால் இறைவனுக்கு வெண்ணாவலீசுவரர் என்று பெயர். நாவல் என்பது வடமொழியில் சம்பு எனப் பெறும். இறைவன் சம்பு நாதர் ஆனார். ஆனை வழிபட்டதால் ஆனைக்கா எனப் பெயர் ஏற்பட்டது. ஆனைக்கா என்பதை வடமொழியில் தந்திவனம், கஜாரண்யம் என மாற்றப்பட்டது. ஆனாலும் ஆனைக்காவே வழக்கில் வழங்கி வருகின்றது. பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்ற போது நாவல் மரம் தலமரம் ஆயிற்று.பெரும்பாலான கோவில்களில் மரங்களில் கீழேயே கடவுளரை அமைத்து வழிபட்டனர்.

பிற்காலத்தில் கோவில் கட்டப்பெற்றபோது மரங்கள் தலமரங்கள் ஆயின.திருப்புன்கூர், திருப்பனையூர், திருப்பயற்றூர், திருமகல், திருவிரும்பூளை, திருத்தெங்கூர், திருநெல்லிக்கா, எருக்கத்தம்புலியூர், திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர், கச்சிநெறிகாரைகாடு, திருவாலங்காடு, திருப்பாசூர், திருக்கள்ளில், திருமுல்லை வாயில், திருவேற்காடு முதலிய தலங்கள் மரங்கள் அடிப்படையில் அமைந்தவையே ஆகும்.தலமரங்கள் அந்தந்த இயற்கைச் சூழலுக்கு ஏற்ப அமைந்தவை ஆகும்.

கோவை மாவட்டத்தில் காரமடை இதற்குத் தக்க சான்றாகும். காரைச் செடிகள் வறண்ட பகுதிகளில்தாம் வளரும். காரை செடியின் கீழ் இருந்த தெய்வ உருவத்திற்கு மாடு நாள்தோறும் பால் சொரிந்து வந்தது. மாடு மேய்ப்பவன் கண்டு காரைப் புதரை ஆய்ந்த போது தெய்வத் திருவுருவம் காணப்பட்டது. பின்னர் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. காரைச் செடிமிக்கிருந்ததால் காரமடை ஆயிற்று. கடவுள் காரமடை நாதர் ஆனார். கரடிகள் மிக்கு நெருங்கிய ஊர் கரடிமடை. பனிமடைந்தவூர் பனிமடை, இன்று பன்னிமடை, கள்ளிமடைந்தவூர் கள்ளிமடை.திருக்கோவில் மரங்களில் உயர்வு தாழ்வு இல்லை. மாமரமும் உண்டு. எருக்கிலை, கொட்டைச் செடி முதலியவைகளும் தலமரமாக உள்ளன. அப்பகுதி மக்களால் எளிதில் வளர்க்கக் கூடிய வளரக்கூடிய மரங்கள் தலமரங்களாயின.

மக்களுக்கும், கால்நடைகளுக்கும் நிழல் தரும் மரங்கள் இறைவனுக்கும் மரமாயிற்று.இயற்கைச் சூழல் வழிபாடு, இயற்கையோடு அமைந்த வாழ்வு தமிழ் மக்கள் மேற்கொண்டவை. மரம், செடி, கொடிகளை மக்கள் போற்றினர். இலை, காய், கனி உணவாயிற்று. வேர், பட்டை முதலியன மருந்தாயிற்று. ‘மருந்தாகித் தப்பா மரம்’ என்பார் வள்ளுவர்.மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப்பெற வேண்டியவை. வீணாக அழிக்கக் கூடாது என்று எண்ணிய தமிழ்ச் சான்றோர் கடவுளரோடு அவற்றைத் தொடர்பு படுத்தினர்.

கிராமப்புறங்களில் இன்றும் கோவில் மரங்களை வெட்டக்கூடாது. வெட்டினாலும் வீட்டு விறகாக எரிக்கக் கூடாது என்ற நம்பிக்கை இருப்பதைக் காணலாம்.–திருச்சிற்றம்பலம்–