Mon. May 6th, 2024

ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தையொட்டி சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி, வழக்கமாக தெற்கு மடாவீதி, துளசிங்க தெருவில் திரும்பி மெரீனா கடற்கரைக்கு அதிகாலை வேளையில் தீர்த்தவாரிக்கு எழுந்தருள்வார்.

அதன்படி, மாசி மகம் நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5.30 மணியளவில் ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள், தெற்கு மாட வீதி, டி.பி. கோயில் தெரு, சிங்கராச்சாரி தெரு, நல்லதம்பி தெரு, பைகிராப்ட்ஸ் சாலை வழியாக கடற்கரையில் சீரணி அரங்கம் இருந்த இடத்தின் பின்புறம் கடற்கரைக்கு எழுந்தருளி, திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பார்த்தசாரதி சுவாமி மாட வீதி மற்றும் குளக்கரையை சுற்றி கோவிலை வந்தடைந்தார். இதில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு எம்பெருமானை மனமுருக வழிபட்டனர்.