Thu. Apr 25th, 2024

செங்குந்தர் சமுதாய மக்கள் ஆவேசம்…

தமிழக அரசியலில் கத்துக்குட்டியான  பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு தலைவர் கே.அண்ணாமலை, பொதுதளத்தில் செய்யும் அரசியலை விட, திரைமறைவில் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் அம்பலமாகி, ஒட்டுமொத்த பாஜகவுக்கும் அவமானத்தை தேடி தந்துக் கொண்டிருக்கிறது.

இந்து மதத்தை கொண்டாடும் பாரதிய ஜனதா கட்சியில்,

புராண காலங்களில் மேனகை, ரம்பாகளை வைத்து

ரிஷிகளின் தவத்தை சிதைத்தை போல,

தமிழக பாரதிய ஜனதாவில் செல்வாக்குமிக்க நிர்வாகிகளை வீழ்த்துவதற்கு கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்

கே.அண்ணாமலை என்று நாள்தோறும்

பொங்கி கொண்டிருக்கிறார் பாஜக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட நடிகையுமான காயத்ரி ரகுராம்.

சொந்த கட்சியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளே,  படுகேவலமான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நேரத்தில்,

தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு உரிய விளக்கம் அளித்து

தன் மீதான களங்கத்தை துடைத்து எறியாமல் ஓடி ஒளித்துக் கொண்டிருக்கிறார் கே.அண்ணாமலை,

சொந்த கட்சிக்கே சூன்யம் வைத்துக் கொண்டிருக்கும் கே.அண்ணாமலை, தோழமை கட்சியான அதிமுகவிற்குள்ளும் பூகம்பம் வெடிக்க, திரைமறைவில் காய் நகர்த்தி மூக்குடைந்து கிடக்கிறார் என்பதுதான் இன்றைய அரசியல் டிவிஸ்ட்…

தமிழகத்தில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர, உறுதுணையாக இருக்கும் அதிமுகவை,

மண்ணோடு மண்ணாக புதைக்க கே.அண்ணாமலை செய்து வரும் சூழ்ச்சிகள் அபாயகரமானவை,

ஆபத்து மிகுந்தவை என்று அலறுகிறார்கள் அதிமுக முன்னணி தலைவர்கள்.

இன்றைய தேதியில் ஒட்டுமொத்த அதிமுகவும்,

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைதான் ஏற்றுக் கொண்டிருக்கிறது  என்பது

தமிழகத்தை கடந்து இந்தியாவின் தலைநகரான டெல்லியில்

ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவர்களுக்கே நன்றாக தெரிந்து இருக்கிறது.

சிதறு தேங்காய்கள் போல,

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகிய மூவருமே  அதிமுகவின் தலைமைப் பொறுப்புக்கு ஏங்கி கொண்டிருக்கும் நேரத்தில்,

சாதிய உணர்வாளர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து

ஆடி வரும் ஆட்டம் எல்லாம் அதிமுகவினரிடம் மட்டுமல்ல,

பொதுமக்களிடம் கூட வரவேற்பை பெற்றுவிடவில்லை

என்பதுதான் கள எதார்த்தம்.

உட்கட்சி பிரச்னையை ஊதி பெரிதாக்கும் ஓபிஎஸ் உள்ளிட்ட மூவர் அணியால்,

ஆளும்கட்சியான திமுகவுக்குதான் சாதகம் என்று கொந்தளிக்கிறார்கள் எம்ஜிஆர், செல்வி ஜெயலலிதா காலத்து அதிமுக விசுவாசிகள்.

பத்தாண்டுகளுக்குப் பிறகு

ஆட்சி பொறுப்பை ஏற்ற திமுக,

20 மாத கால ஆட்சியிலேயே

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம்

 சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.

ஸ்டாலினின் மனைவி துர்கா,

அவர்களது மகன் உதயநிதி,

ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர்தான்

ஆட்சியையும் தமிழகத்தையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குக்கிராமத்தில் வாழும் திமுக தொண்டர்களுக்கு கூட தெரிந்து இருக்கிறது.

திறமையற்ற ஆட்சி நிர்வாகத்திற்கு

சரியான பாடம் புகட்டவும்,

 மிதமிஞ்சிய ஊழல்

அனைத்து துறைகளிலும் தாண்டவமாடுவதையும்

தடுத்துநிறுத்த, தட்டிக் கேட்க

 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நல்லதொரு வாய்ப்பாக எதிர்க்கட்சியினருக்கு அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில்

இன்றைய தேதியில்

தொண்டர்கள் பலத்தோடு முதல் இடத்தில் இருக்கும் திமுக,

ஆட்சி நிர்வாகத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.

ஆளும்கட்சியாக இருந்த போதும்

கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் வகையில்,

ஈரோடு கிழக்கு தொகுதியில்

மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சிக்கே விட்டு கொடுத்துவிட்டது.

ஆனால், தமிழகத்தில் தத்தி தத்தி  நடந்து கொண்டிருக்கும்

பாரதிய ஜனதா கட்சிக்கு தலைமை வகிக்கும் கே.அண்ணாமலை,

 கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டுக் கொண்டிருப்பது

 எந்த வகையில் நியாயம் என்று

கொந்தளிக்கிறார்கள் எடப்பாடியாரின் விசுவாசிகள்.

ஆளும்கட்சியின் பலத்தோடு

 தேர்தல் களத்தில் குதித்துள்ள

காங்கிரஸை வீழ்த்தவேண்டும் என்றால்,

பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவால்தான் முடியும் என்று கூறி

ஒதுங்கிக் கொண்டது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.

தமாகா தலைவர் ஜிகே வாசனுக்கு உள்ள பெருந்தன்மை,

அரசியல் நாகரிகம்

கே.அண்ணாமலையிடம் எதிர்பார்க்க முடியாது என்ற போதும்கூட,

கொங்கு மண்டலமே அதிமுகவின் கோட்டை என்பது

சாதாரண வாக்காளர்களுக்கே தெரிந்து இருக்கும் நிலையில்,

இபிஎஸ் வகுத்துக் கொண்டிருக்கும் வியூகத்தையே சிதைக்க

சதித்திட்டத்தில் ஈடுபடுவது ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலைக்கு

அழகா என்று

குமறுகிறார்கள் ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை

எடப்பாடியார் தலைமையிலான அதிமுகவுக்குதான் அதிக செல்வாக்கு இருக்கிறது என்கிற போது,

 ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி,

தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு

பெரும்பான்மையாக உள்ள செங்குந்த முதலியார் வாக்குகளை கணக்கில் கொண்டு,

அனைத்து முதலியார்களை உள்ளடக்கி

அரசியல் கட்சியை கட்டமைத்துள்ள, புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகத்தை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுமாறு

தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார் கே.அண்ணாமலை என்று

குற்றம் சுமத்துகிறார்கள் எடப்பாடியாரின் தீவிர விசுவாசிகள்..

அகமுடையார், பிள்ளைமார் உள்ளிட்ட ஒன்றிரண்டு சாதிகள்

எல்லாம்

முதலியார் என்ற அடையாளத்தை சுமந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட்டத்தில்

செங்குந்த முதலியார் என்ற தனித்த அடையாளத்தை சுமப்பதைதான்

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்தவர்கள் கௌரவமாக நினைக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பரவலாக செங்குந்தர், கைகோளர் என்ற அடையாளத்தை கொண்டிருக்கும் முதலியார் சமுதாய மக்கள்,

திமுகவை நிறுவிய பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு

அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களாகவே உள்ள செங்குந்த முதலியார்கள், அரசியலில் உரிய  அங்கீகாரம் பெற தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.

பிள்ளைமார் சமுதாயத்தைச் சேர்ந்த ஏ.சி.சண்முகம்

பாரதிய ஜனதா வேட்பாளராக

ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறக்கப்பட்டால்,

ஒட்டுமொத்த செங்குந்த சமுதாய மக்களின் வாக்குகளும் ஏ.சி.சண்முகத்திற்கு கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களின்

உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளாமல்,

அரைவேக்காட்டுதனமாக, எடப்பாடியாரை பழிவாங்க வேண்டும் என்ற வெறியோடு

பாரதிய ஜனதா தலைவர் கே.அண்ணாமலை செய்யும் சூழ்ச்சிகளுக்கு

ஏ.சி. சண்முகமே துணை போகவில்லை என்பதுதான் ஆறுதலான அம்சம் என்கிறார்கள் எடப்பாடியாரின் ஆதரவாளர்கள்.

திமுக ஆட்சியையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் நாள்தோறும் கடுமையாக விமர்சனம் செய்து வரும் கே.அண்ணாமலை,

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸை வீழ்த்த வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியுடன்

நேர்மையான எண்ணத்தில் கை கோர்த்து

அதிமுக வேட்பாளரின் வெற்றிக்கு உண்மையாக உழைக்க வேண்டும் என்பதுதான் அதிமுக, பாஜக நிர்வாகிகளின் வேண்டுகோள்.

அரசியலிலும், தேர்தல் களத்திலும் சாணக்கியதனம் நிரம்பிய அனுபவம் மிகுந்த, செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களே

மண்ணை கவ்வி இருக்கிறார்கள் என்பதை அரசியலில்,

தேர்தல் களத்தில் கத்துக்குட்டியான கே.அண்ணாமலை புரிந்து கொள்வது, அவரது அரசியல் பயணத்திற்கு நல்லது என்று கடுமையாக எச்சரிக்கிறார்கள் கொங்கு மண்டல அதிமுக மூத்த நிர்வாகிகள்.