Fri. Apr 26th, 2024

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் குஜராத் மாநிலம் காந்திநகரில் 2 நாள் தேசிய கல்விக் கொள்கை மாநாடு இன்று துவங்கியது. இந்த மாநாட்டில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசின் கல்வி அமைச்சர், மாநாட்டை புறக்கணித்துள்ளது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய பாஜக அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தேசிய அளவில் குஜராத்தில் 2 நாட்கள் கல்வி மாநாடு இன்று துவங்கியது. புதியக் கல்விக் கொள்கை குறித்து கல்வி மாநாட்டில் விவாதம் நடைபெற்றது. தேசிய கல்விக் கொள்கையை தேசிய அளவில் அமல்படுத்துவது குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த மாநாட்டில் ஆய்வு செய்தார். இந்த மாநாட்டில் பங்கேற்காமல் தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

மாநாட்டில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியோ, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியோ பங்கேற்கவில்லை. துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை. 

புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழகம் கொண்டிருக்கிறது. அண்மையில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்கூட புதிய கல்விக்கொள்கை குறித்த விவாதம் நடைபெற்றது. 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு கூட பொதுத்தேர்வு நடத்தும் நிலை புதிய கல்விக்கொள்கையில் இருக்கிறது, இதையெல்லாம் எப்படி ஏற்கமுடியும? என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியிருந்தார். 

புதிய கல்விக்கொள்கையில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஏற்கக்கூடிய நிலையில் இல்லை என தமிழக அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்வி மாநாட்டை தமிழகம் புறக்கணித்துள்ளது தேசிய அளவிலும்,ஒன்றிய பாஜக அரசிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.