Fri. Apr 26th, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று பிற்பகலில் வருகை தந்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தை அம்மாநில காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் இதுவரை மேகதாது விவகாரம் பற்றி வாய் திறக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது. அக்கட்சி கூட்டணி வகிக்கும் அணியின் தலைமை பொறுப்பில் உள்ள தி.மு.க அரசும் காங்கிரஸின் கா்நாடாகப் போக்கை கண்டிக்கவில்லை. இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சராக நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மாறியுள்ளார்.


தமிழகத்தில் உள்ள காங்கிரஸுக்கும் கர்நாடகா காங்கிரஸுக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. காங்கிரஸின் போக்கை தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு ஆதரிக்கிறதா? என்பதை ஊடகங்கள்தான் கேட்டு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், கர்நாடகாவில் மேகதாது அணை தொடர்பான விவகாரம் குறித்து மத்திய அரசு மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வரும் நேரத்தில், அந்த மாநிலத்தில் மேக்கேதாட்டூ அணையைக் கட்டமுடியாது என்று அந்த துறையைச் சேர்ந்த அமைச்சர் கஜேந்திரசிங் சேகா தெளிவுப்படுத்தியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கும் விதமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மேக்தாது பாதயாத்திரை எனும் பெயரில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் கொடுக்காத நிதியை தமிழகத்திற்கு பிரதமர் மோடி, கொடுத்துள்ளார். தி.மு.க அரசுக்கு ’விஷன் பிளான்’ எனும் தொலைநோக்கு திட்ட பார்வை இருப்பதாக தெரியவில்லை. நிதி திரட்டுவதற்கு திமுக அரசு கடைசியாக நம்பியிருப்பது டாஸ்மாக் கடை வசூலைதான். குவாட்டர் விலையையும், பீா் விலையையும் அதிகமாக உயர்த்தினால் அரசு கஜனாவுக்கு கூடுதலாக 2 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என்று கொண்டாடிக் கொண்டு இருக்கின்றனர்.

ஆவின் மூலம் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்து பொருள்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் அ.தி.மு.க அரசில் போடப்பட திட்டங்களைத்தான் திறந்து வைத்துள்ளார். பொய்யை மட்டும் பேசிக் கொண்டு தனது காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார் நமது தமிழக முதல்வர். மத்திய அரசு நிதி வழங்கும் பல திட்டத்திற்கு இவர்களது பெயரை வைத்துவிட்டு இப்போது மத்திய அரசை குறை சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்
இவ்வாறு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.


முன்னதாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் ஆண்டு விழாவின் பத்தாவது நாள் வழிபாட்டில் கலந்துகொண்ட தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலைக்கு, கோயில் முன்பு பாஜக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு வழங்கினர். தொடர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்த அவர், பின்னர், பாஜக நிர்வாகிகள் உள்பட திரளாக கலந்துகொண்ட மக்களிடையே கே.அண்ணாமலை உரையாற்றினார். மகளிர் நாள் விழாவையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் கே.அண்ணாமலை வழங்கினார்.

இந்தக் கூட்டம் முதல், கே.அண்ணாமலை பங்கேற்ற அனைத்து நிகழ்வுகளிலும் பாஜக எம்எல்ஏ எம்ஆர் காந்தி, கன்னியாகுமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.