Sat. Apr 27th, 2024

கோவை மாவட்டத்தில் உள்ள ஈஷா ஃபவுண்டேஷன் வளாகத்தில் வரும் 1 ஆம் தேதி மஹாசிவராத்திரி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்வுள்ளது. இதனையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குருவுக்கு வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது:

நம் மனம், உடல் மற்றும் புத்தியை ஒருங்கிணைக்க ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்”

பிரதமர் மோடி சத்குருவுக்கு அனுப்பிய மஹாசிவராத்திரி வாழ்த்து கடிதத்தில் பிரதானமாக இடம் பெற்றுள்ள வாசகங்கள் இவை…

ஈஷா நிறுவனர் சத்குருவுக்கு பிரதமர் அனுப்பியுள்ள மடலின் வாசகங்கள் இதோ…

புனிதமான மஹாசிவராத்திரி கொண்டாட்டத்திற்கு தாங்கள் செய்துவரும் ஏற்பாடுகளை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.


மஹாசிவராத்திரி விழா அனைவருக்கும் ஒரு உத்வேகத்தை அளிக்கும் ஆதாரமாக உள்ளது. ஆதியோகி எங்கும் நிறைந்து இருக்கிறார் என்பதை நினைவு கூர்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும். நம்முடைய மனம், உடல் மற்றும் புத்தி ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஜீவனில் இருந்து சிவனாக மாறுவதற்கு ஆதியோகி நமக்கு வழிகாட்டுகிறார்.

மக்களின் ஆன்மீக வளர்ச்சிக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்படுவதற்கும் நீங்கள் எடுத்து வரும் அயராத முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள், கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மறுமலர்ச்சி என பன்முக திட்டங்களை நீங்கள் முன்னெடுத்து செய்துவருகிறீர்கள். உங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்தும் எண்ணற்ற மக்களின் வாழ்வில் நேர்மறை மாற்றத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்த மஹாசிவராத்திரி விழா, மனிதகுலம் தனது அறியாமையில் இருந்தும், இருளில் இருந்தும் கடந்து வருவதற்கான பாதையை நமக்கு காட்டட்டும். மனித குலத்தின் மீது தனது ஆசிகளை பொழியுமாறு ஆதியோகியை நான் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமரின் வாழ்த்து மடலுக்கு ஈஷா அறக்கட்டளை நன்றி தெரிவித்துள்ளது. அதன் விவரம் அந்த நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ஆதியோகி வளாகத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ள மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கு எங்களது நன்றிகள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.