Thu. May 9th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது,வடசென்னையில் உள்ள தண்டையார்பேட்டையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக பரபரப்பு ஏற்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கள்ள ஓட்டு முயற்சிப்பதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி,அரை நிர்வாணமாக இழுத்து சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. இதனையடுத்து, ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, ஜெயக்குமார் காவல்துறையினரால் நேற்று முன்தினம் இரவு (21 ஆம் தேதி) கைது செய்து செய்யப்பட்டு ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்பின்னர்,மார்ச் 7 ஆம் தேதி வரை ஜெயக்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நடுவர் முரளிகிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன்பேரில்,அவர் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து, ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் முறைகேடுகளை தடுக்க கோரி பிப்.19 ஆம் தேதி ராயபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவர் உள்பட பல்வேறு அதிமுகவினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று அறிவித்தனர். பூந்தமல்லி சிறையில் உள்ள அவரிடமும் கைது விவரம் தெரிவிக்கப்பட்டது. .

இந்நிலையில், ஜெயக்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பபட்ட ஜாமீன் மனு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மீது பதியப்பட்ட மற்றொரு வழக்கு தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. அவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மார்ச் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டது. இதனையடுத்து, பூந்தமல்லி கிளைச் சிறையில் இருந்து இன்று இரவு புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஜெயக்குமாரை காவல்துறையினர் அடைத்தனர்.