Thu. Apr 25th, 2024

தகவல் பாண்டியன் சுந்தரம், மயிலாடுதுறை

பச்சிளம் குழந்தையின் உயிர் காக்க ஜி.எஸ்.டி ரூபாய் 6 கோடி தள்ளுபடி செய்த பிரதமர் மோடி!மும்பையைச் சேர்ந்த பிரியங்கா, மிஹிர் தம்பதியின் 5 மாதக் குழந்தை தீரா காமத். இந்தக் குழந்தை மிகவும் அரிதான ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோபி’ (டைப்1) எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால், குழந்தையின் நரம்பு மண்டலம் முற்றிலும் பாதிக்கப்பட்டு தசைகள் செயல்படாமல் போயின. இந்தக் குழந்தைக்கு மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.குழந்தையின் மருத்துவச் செலவுக்காக பிரியங்கா, மிஹிர் தம்பதி இருவரும் க்ரவுட் ஃபண்டிங் மூலம் நிதியுதவி கேட்டதில் ஏராளமான நிதி சர்வதேச அளவில் குவிந்தது. மேலும், குழந்தையின் மருத்துவச் செலவுக்கு மத்திய அரசு உதவுமாறும் கோரி பிரதமர் மோடிக்கு 2020, அக்டோபர் மற்றும் 2021 ஜனவரி மாதம் கடிதமும் தம்பதியினர் எழுதினர். “குழந்தைக்கு தேவைப்படும் மருந்தான ஜோல்ஜென்சிமா எனும் மருந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். இந்த மருந்தின் விலை ரூ.16 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் இந்த மருந்து கொண்டு வந்து சேர்க்க ஜிஎஸ்டி வரியாக 12 சதவீதம், இறக்குமதி வரி 23 சதவீதம் என மொத்தம் ரூ.6 கோடிவரை அரசுக்கு செலுத்த வேண்டும். “ஆனால், குழந்தையின் சிகிச்சைக்காக பல்வேறு தரப்பிலும் இருந்து எங்களுக்கு மருந்துக்கான தொகை மட்டுமே நிதியுதவியாக இதுவரை கிடைத்துள்ளது.வசதியானவர்களால்கூட இவ்வளவு செலவு செய்து மருத்துவம் செய்ய முடியாத சூழலில் பலரின் உதவியால் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் குழந்தைக்கு உதவி கிடைத்துள்ளது.”எங்கள் வாழ்க்கையில் ரூ.ஒரு கோடி பார்ப்பதே அரிதானது. வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் ஒருகோடியைப் பார்க்க முடியாது. ஆனால், குழந்தைக்கான மருந்தை இந்தியா வரவழைக்க மேலும் ரூ.6 கோடி வரியாக செலுத்தி வரவழைக்க வேண்டியிருக்கிறது.இதைச் செலுத்துவது நிச்சயமாக எங்களால் இயலாது. பொதுவெளியில் மேற்கொண்டு நிதி திரட்ட முயன்றாலும் இந்த அளவு கிடைப்பதில் சிரமமே உள்ளது.”ஆதலால், குழந்தையின் நலன் கருதியும், உயிரைக்காக்கும் பொருட்டும் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி வரியை தள்ளுபடி செய்ய வேண்டும், மருந்துகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்” என பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு குழந்தையின் பெற்றோர் கடிதம் எழுதி, இன்ஸ்ட்டாகிராமிலும் பதிவிட்டனர். மேலும், குழந்தைக்கு தேவைப்படும் மருந்தின் விவரம், சிகிச்சையின் விவரம் ஆகியவற்றையும் இணைத்து அனுப்பினர்.பாஜக தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய குழந்தையின் நிலையை எடுத்துக் கூறி ஜிஎஸ்டிவரி, இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்ய வேண்டுகோள்விடுத்தார்.இதையடுத்து, பிரதமர் மோடியின் உத்தரவின் பெயரில் குழந்தை தீரா காமத் உயிர்காக்கும் மருந்துக்கான இறக்குமதி வரி மற்றும் ஜிஎஸ்டி வரி என ரூ.6 கோடியை தள்ளுபடி செய்தும், மருந்துகளை விரைவாக விடுவிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது!