Thu. Mar 28th, 2024

சமூக ஊடகங்களின் வளர்ச்சி மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதற்கு இந்த செய்தியே மிகப்பெரிய உதாரணம்…..

இன்று ( ஆகஸ்ட் 23 ) பிற்பகல் ECR இஞ்சம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன். கொரோனா wave 2 க்கு பிறகு பிள்ளைகளை பொது இடத்துக்கு இப்போது தான் கூட்டி செல்கிறேன், அதுவும் இன்று பெரிய மகள் தமிழிசை பிறந்த நாள் என்பதால்.
ஹோட்டலுக்குள் ஒரு ஊரே இருந்தது வெளியிலும் கூட்டம். நேரம் இரண்டு மணி ஆனதால், வேறெங்கும் செல்ல முடியாது, இந்த கூட்டத்திலும் நிற்பதா என இருவேறு எண்ணங்கள் எங்களுக்குள். கிளம்பி விடுவோம் என ஏதோ சொல்ல சற்று தள்ளி நிறுத்தப் பட்டுருக்கும் காரை நோக்கி நடந்தோம்.

காரில் நான் ஏறி உடகார, பின்னர் வந்த மனைவி ஏறும் போது ஒரு அம்மா பாவமா நம்ம கார பார்த்துகிட்டே இருக்காங்க என்றார்.

அதற்குள் கார் கண்ணாடி அருகே அந்த அம்மா வந்து நின்றார்.

கண்ணாடியை நான் கீழே இறக்க..

ஐயா கொஞ்சம் காசு கிடைக்குமா என உடைந்த குரலில் சொன்னார்… ப..ஸ்…ஸுக்கு இல்ல… என்றார் உடைந்த குரலில் தயங்கி தயங்கி!

ஆளை பார்த்தவுடன் வாழ்ந்த குடும்பம் என்றே பட்டது… எழுபது வயது க்கு மேல வயது…..சீரான உடை…. கையில் பழைய handbag… மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு… கையேந்துவது பற்றி உள்ள குமுறல்..

நான் சட்டென ஒரு நோட்டை எடுத்து நீட்டினேன்… வாழ்ந்து கெட்டவர் வலி மிக கொடியது … அதுவும் முதுமையின் இயலாமையில் ஏழ்மை மிக மிக கொடியது.

வாங்கி கொண்டு கையெடுத்து கும்பிட்டார்..

கண்ணாடியை ஏற்றினேன்…

ஏதோ சொல்வது அறிந்து கண்ணாடியை மீண்டும் இறக்கினேன்…

“நான் தேவநேயப் பாவாணர் பேத்தி…. யார் கிட்டயும் கேட்க கூச்சமா இருந்தது… உங்க கார் பின்னாடி நல்ல தமிழ் எழுதி இருந்தது அதான் உங்க கிட்ட கேட்கணும் ன்னு தோனுச்சு” என முடித்தார்

“என்னது தேவநேயப் பாவாணர் பேத்தியா நீங்க??!?” என்றேன் அதிர்ச்சியுடன்

“ஆமாம் சார்” என கண்ணில் நீர் வழிந்தது..


தேவநேயப் பாவாணர் தற்கால தமிழ் சமூகம் மறந்த, எக்கால தமிழ் சமூகமும் மறக்க கூடாத மிகச்சிறந்த தமிழறிஞர் சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.
இன்று பலர் நடத்தும் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆணிவேராய் இருந்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று வந்த முதல் குரல்களில் ஒன்று அவருடையது‌. குமரிக்கண்டம் ஆராய்ச்சி கட்டுரைகள், இலக்கணம் இலக்கியம் என அவருடைய எழுத்துக்கள் சொல்லி மாளாது.
இவரது ஒப்பற்ற தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் “மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்” என்கிற பட்டம் இவருக்கு பெற்று தந்தது… இந்திய அரசு தபால் தலை வெளியிடும் அளவுக்கு மிக முக்கியமான நம் மொழி பாட்டன் ஐயா.


தேவநேயப் பாவாணர் பற்றி அறிந்த எனக்கு அவரின் உயரம் அறிந்த எனக்கு பெரும் அதிர்ச்சி தான் தந்தது அந்த அம்மாவின் கண்ணீர்

தொடர்ந்த அவர்…
“சார்… எனக்கு ன்னு யாரும் இல்ல ‌…. சர்கார் எனக்கு தந்த வீட்டையும் என் பையன் புடுங்கிட்டு துரத்திட்டான்…” என அழுதபடியே இந்த படத்தில் இருக்கும் செர்டிஃபிகேட்டை நீட்டினார்…
படித்தபடியே காரை விட்டு இறங்கினேன்..

“என்னம்மா பண்ணுறீங்க ‌‌…. எங்க இருக்கீங்க…”

“பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டுல வாடகைக்கு இருக்கேன்…”

“வேற செலவுக்கு…?”

“எங்க சர்ச் பாஸ்டர் வீட்டு வாடகை ரெண்டாயிரம் குடுத்துடுறாரு… முதியோர் பென்ஷன் ஆயிரம் ரூபாய் வருது…. சோழிங்கநல்லூர் government Libraryல வேலைக்கு இருந்தேன்.. இப்ப கொரோனா க்கு அப்பறம் அதுவும் இல்ல…ரொம்ப சிரமமா இருக்கு…” என்றார் கண்ணீர் மல்க.

“பையன் ஏன் உங்கள வீட்ட விட்டு துரத்துனார்?”

“அவன் ஒரு மாதிரி ஆயிட்டான் சார்… என்ன அடிக்க வருவான்…வீட்டுல இருக்க கூடாது ன்னு சொல்லிட்டான் ‌..”

“Government குடுத்த வீடு எங்க இருக்கு..”

“அது தாம்பரம்ல”

பேசும்போதே…
இந்த படத்தை எடுத்து காட்டினார்…
“எங்க தாத்தா நினைவு நாளுக்கு பிறந்தநாளுக்கு கூப்பிட்டு அனுப்பவாங்க…சிலை க்கு முன் ஃபோட்டோ எடுப்பாங்க…”

“அம்மா இப்ப யாருமே உங்களுக்கு இல்லையா… சாப்பாட்டுக்கு..?.”

“ஆயிர ரூபாய் மாச பென்ஷன் வெச்சு… தண்ணீர் செலவு போக சாப்பாட்டு க்கே கஷ்டம்… மருந்து மாத்திரை வேற… கோவிலுக்கு போக வர பஸ்ஸுக்கு கூட இருக்காது… ரொம்ப கஷ்டமா இருக்கு ய்யா….”

“அம்மா உங்க கஷ்டத்தை நான் எழுதட்டுமா… இந்த மாதிரி உங்க பையன் செஞ்சுட்டாரு… பாவாணர் பேத்தி இப்படி கஷ்ட படுறாங்க ன்னு”

“தாராளமாக எழுதுங்க சார்… “

“இப்ப இங்க எதுக்கு வந்தீங்க…”

“ஒருத்தங்க காசு தரேன் ன்னு சொன்னாங்க… “

“தந்தாங்களா… எவ்வளவு”

“தரல சார்…. அப்பறம் வா ன்னு சொல்லிட்டாங்க…அத வெச்சு தான் இந்த மாசம் சாப்பிடலாம் ன்னு இருந்தேன்… _ரூபாய் ” என்றார்

என்னிடம் அந்த தொகை இருந்தது அதை எடுத்து குடுத்தேன்..

கண்ணீர் அதிகமாகி அழுதார்…

“நீங்க நல்லாருக்கணும் சார்” என்றார்

“உங்க நம்பர் குடுங்க மா…இதை வெச்சு பதிவு போடலாம் ல… உங்களை யாராவது அழைத்து பேசுவாங்க உதவி வரும் ன்னு நம்புறேன்”

“செய்யுங்க சார்… செய்யுங்க….”

“என் பெயர் ராஜகோபாலன் ‌….” என்று சொல்லி என் நம்பர் தந்தேன்

“உங்களுடைய தேவை என்ன ம்மா?”

“எனக்கு வேலை போயிடுச்சு…ஒரு வேலை வேணும்…எது இருந்தாலும் செய்வேன்”
இந்த வயதில் காசு வந்தால் போதும் என சொல்லவில்லை…பையனை விரட்டி வீட்ட மீட்டு தாங்க என சொல்லவில்லை … உழைத்து சாப்பிட வேண்டும் என்கிற தீர்க்கம் இருந்தது… கொஞ்சம் விரக்தி தொட்டு.
அந்த குரலில் விரக்தியில் நனைந்து நஞ்சுப்போன துளி நம்பிக்கை இருந்தது

நம் நாட்டின் விடுதலை போர் மொழி வளர்ப்பு தியாகிகள் தலைவர்களின் வாரிசுகளுக்கு இத்தகைய நிலைமை புதிதல்ல ‌….
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்றான் வள்ளுவன்

அதனால் தான் என்னவோ நம்மை சுற்றி இப்படி புது புது வியாதிகள் வந்து வாட்டுகிறது..

பல பல நன்றிகளை எளிதாக மறந்து விடுகிறோம்

இந்த அம்மா கேட்பது ஒரு சிறிய வேலை… அதன்மூலம் மாதம் சாப்பாட்டு க்கும் மருத்துவ செலவுக்கும் கையேந்தா நிலை…. கேட்பது நம் மொழியின் மிகப்பெரும் ஆளுமையின் வாரிசு…இதை கூட நாம் ஒரு சமுதாயமாக செய்ய முடியாதா…?

இந்த பதிவை பார்க்கும் அதிகாரிகள், அரசு இயந்திரத்தில் இருப்பவர்கள் அந்த அம்மாவின் குறைந்தபட்ச உதவியை நிறைவேற்றி தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…
பெரும் கஷ்டத்தில் இருக்கும் நம்மொழியின் பெரும் ஆளுமையின் வாரிசு க்காக…. தமிழுக்காக…மனிதத்து க்காக.

(திருமதி. ரச்சேல், 7358431059 )

முடிந்தவரை இந்த பதிவை பகிருங்கள்

பேச்சுக்கு இடையில் என் மகளை அழைத்து, இன்னைக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள்… உங்க ப்ளெஸ்ஸிங் வேண்டும் என்றேன்

உடனே ஜெபம் செய்து, நூறு வயது வாழ்வ குழந்தை என்றார்

லாக் டவுன் சட்டத்தால் எப்போதும் மகளின் பிறந்தநாளுக்கு சென்று தரிசனம் செய்யும் திருவேற்காடு கருமாரி அம்மனை இன்று தரிசனம் செய்ய முடியவில்லையே என இருந்தேன்

கருமாரியம்மனுடன் மேரி மாதா ஆசியும் சேர்ந்தே கிடைத்தது என் மகளுக்கு

தகவல் : இரா. இராஜகோபாலன்

தொழில்துறை அமைச்சரின் மனிதநேயம்

இந்த தகவல் தொழில் துறை தங்கம் தென்னரசு கவனத்திற்கு சென்றவுடனே அதிவேகமாக நடவடிக்கை எடுத்துள்ளார்.. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்..