Wed. May 8th, 2024

வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் செய்தியாளர்களை இன்று காலை அவர் சந்தித்தார். அப்போது அவர், சசிகலா முழுக் குணமடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதிமுகவுக்கு அவர் மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்படப் போவதில்லை என்று தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று கூறிய அவர், வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விவசாயிகளின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை.

மாறாக விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது. இது ஜனநாயக நாடாகத் தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும்.

தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதைக் காண முடிகிறது. அவர் மீண்டும் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு அவர் தமிழகத்துக்கு வரவுள்ளார். எனவே காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கேற்றவாறு தொகுதிகள் எண்ணிக்கை அமையும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.