Fri. May 17th, 2024

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒருபோதும் விடமாட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சூடாக தெரிவித்துள்ளார்.

கேமதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசைக் கண்டித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சாவூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். இந்தப் போராட்டத்தை தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

மேகதாது அணை விவகாரம் :

தமிழக முதல்-அமைச்சர் பிரதமரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்துத் தமிழகத்தின் நிலைப்பாட்டை விளக்கினார்.


மேகதாது அணை அமைக்க தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது எனக் கோரி, அப்போதைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக முதல் மந்திரிக்கு பதில் கடிதம் எழுதினார்.

இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடகாவில் பதவியேற்றுள்ள புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மையும் கூறிவருகிறார்.

தமிழக பாஜக எதிர்ப்பு

கர்நாடகாவின் நிலைப்பாட்டிற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும்நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக பா.ஜ.க. சார்பில் தஞ்சாவூரில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தஞ்சை சோழர் சிலையில் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தொண்டர்களுடன் மாட்டு வண்டியில் அண்ணா சிலை வரை பேரணியாகப் பயணமானார். பேரணி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு முடிவடைந்ததையடுத்து, அதே பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது

போராட்டத்தைத் தமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தொடங்கி வைத்தார். உண்ணாவிரத போராட்டத்திற்கு அண்ணாமலை தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அண்ணாமலை ஆவேசம்

போராட்டம் துவங்குவதற்கு முன்னதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசியல் பேச இன்று நாம் வரவில்லை; மேகதாதுவில் அணை கட்டுவதை கர்நாடக அரசு நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்தபோராட்டம். விவசாய சட்டம் வந்தால் சொந்த பொருளை விவசாயிகள் சிறப்பாக விற்கலாம் ஆனால் தி.மு.க. இதை விட மாட்டார்கள் ஏன் என்றால் அவர்கள் கார்ப்ரேட்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட ஒரு போதும் விடமாட்டோம். தமிழக பா.ஜ.க. என்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் பக்கம் நிற்கும்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.