Sat. May 18th, 2024

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையின் விவரம் இதோ…

திருச்சி பாரத் மிகுமின் நிறுவனத்தில் (BHEL), மருத்துவப் பயன்பாட்டுக்கான உயிர்க்காற்று (ஆக்சிஜன்) ஆக்கும் தொழிற்கூடம் நல்ல முறையில் இயங்கி வந்தது. பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாதால், 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றது.

அங்கே, 8 மணி நேரத்தில், 1000 கியூபின் மீட்டர், அதாவது 150 உருளைகள் உயிர்க்காற்று ஆக்கும் திறன் கொண்டது. ஒரு நாளைக்கு மூன்று வேலைநேரங்களில் குறைந்தது 400 உருளைகள் உயிர்க்காற்று ஆக்க முடியும். அவ்வாறு கிடைத்த ஆக்சிஜன், 2016 ஆம் ஆண்டு வரை, திருச்சி பெல் மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டு வந்தது.

பெல் ஆலையின் மேலாண்மைக் கோளாறுகளால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை இயக்கப்படாமல் உள்ளது.

எனவே, தமிழக அரசு, திருச்சி பெல் ஆலையில், உயிர்க்காற்று ஆக்கும் பணிகளை உடனே தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.


இவ்வாறு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.