Sun. May 19th, 2024

தாராபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார். அதன் விவரம் இதோ..

மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்ற வேண்டுமானால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிற மாநில அரசு இருந்ததால்தான், அது சாத்தியமாகும். தமிழகத்தை முன்னேற்ற மாநிலமாக மாற்ற, மத்திய அரசு நிறைய உதவிகளை செய்து வருகிறது. தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான கோதாவரி காவிரி இணைப்புத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை நமது பிரதமர் ஒதுக்கீடு, தமிழக மக்களின் கனவை நிறைவேற்றி வைப்பார்.

அதுபோல, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நொய்யல் ஆறு நவீனப்படுத்த ரூபாய் 230 கோடி ஒதுக்கப்பட்டு 60 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைந்தவுடன் முழு பணிகள் நிறைவடையும்.

பல ஆண்டுகளாக மக்களின் கனவாகவே இருந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நினைவாக்கி உள்ளது எனது தலைமையிலான அம்மாவின் அரசு. தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதுபோலவே, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவாக்க நிதியுதவி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கட்டமைப்புகள் சிறப்பாக இருப்பதால்தான், வெளிநாட்டு சிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வருகின்றன. விரைவில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்க் கல்வி படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிபேசினார்.