Sun. Apr 20th, 2025

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையில் வசிக்கும் சக்தி ராவ் என்பவர் மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், 2019 ஜனவரி 1ல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டிருந்ததாக குறிபிட்டுள்ளார்.  

அந்த தேர்வில், நான் தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படவில்லை. இதுகுறித்து விசாரித்தபோது, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான இட ஒதுக்கீட்டு சலுகை, தொலைதூர கல்வியில் பயின்றவருக்கும் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இந்த முறையில் பயில்வோர் சில பாடங்களை ஆங்கில வழியிலும், சில பாடங்களை தமிழ் வழியில் படிக்கின்றனர். ஆகவே அவர்களை தமிழ் வழியில் பயின்றவர்களாக கருதக் கூடாது..

அரசு தேர்வாணையத்தின் ஒவ்வொரு தேர்வு அறிவிப்பிலும் தமிழ் வழியில் பயின்றவருக்கு வழங்கப்பட்டு வரும் 20% இட ஒதுக்கீட்டை அதிகமாக தொலைதூர கல்வி பயின்றவர்களே பெறுகின்றனர்.

எனவே, தொலைதூர கல்வி நிறுவனங்களுக்கு 20 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் தேர்வு செய்வதற்கும்,பணி நியமன ஆணை வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், நேரடியாக கல்லூரிக்கு சென்று தமிழ் வழியில் பயின்றவர்களை அடிப்படையாகக் கொண்டு புதிய அறிவிப்பு வெளியிட்டு குரூப்1 பணியிட நியமனத்தை நடத்த உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று  நடைபெற்றது. . அப்போது, 1 முதல் 12-ம் வகுப்புவரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டி.என்.பி.எஸ்சி. பணியிடங்களில் 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி அல்லது தொழில்துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் இந்த உத்தரவு பொருந்தும். 

டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில், 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே தமிழ்வழியில் பயின்றதற்கான 20 சதவிகித இட ஒதுக்கீடு பெற தகுதியானவர்கள். இந்த முறையில் பயின்றவர்களுக்கு மட்டுமே 20 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த முறையிலான தேர்ச்சி பெறுவதற்காக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டது தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் உரிய விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.