Fri. Mar 29th, 2024

சிறப்பு வரலாற்று கட்டுரை பிரபல எழுத்தாளர் பாலன் நாச்சிமுத்து

யப்பான்(கி.மு.100-1853): யப்பானின் (Japan) ஆதி காலப்பண்பாடு என்பது யயோய் (Yayoi) பண்பாடாகும். கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து இப்பண்பாடு இருந்து வருகிறது. கி.பி.200ஆம் ஆண்டிலிருந்து போர் வீரர்கள் குலம் யப்பானை ஆட்சி செய்து வந்தது. கி.பி. 400லிருந்து சீனாவின் கருத்துகள் யப்பானில் பரவின. கி.பி. 552லிருந்து புத்தமதம் இங்கு பரவியது. கி.பி. 622இல் சீனா போலவே இங்கும் அரசு உருவானது. யப்பான் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அதனை ஆள ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். கி.பி. 1000க்குப்பின் டெய்மோ(Daimyo) நிலப்பிரபுக்கள் வலிமையானார்கள். அவர்களுக்கு பணியாற்றும் வீரர்கள் சாமுராய்கள்(Samurai) எனப்பட்டனர். டெய்மோ குடும்பங்களில் வலிமையான மினமோட்டோவின் யோரிடோமோ(Yoritomo) கி.பி 12ஆம் நூற்றாண்டில் அரசனது பேரில் நாட்டை ஆண்டார்.

கி.பி. 1192இல் அவருக்கு சோகன்(Shogun) என்ற பட்டத்தை அரசர் வழங்கினார். அதிலிருந்து மன்னர் பெயரில் சோகன்கள் நாட்டை ஆண்டனர். கி.பி. 1543இல் ஐரோப்பியர்கள் யப்பான் வந்தனர். கி.பி. 1603இல் ஆண்ட டோகுகாவா(Tokugawa) சோகன் குடும்பம், வெளிஉலகம் ஆபத்தானது எனக் கருதி, கி.பி. 1630லிருந்து வெளி உலகோடு தொடர்பைத் துண்டித்துக் கொண்டது. 200 ஆண்டுகளுக்குப்பின் கி.பி. 1853 முதல் வெளிஉலகோடு தொடர்பு ஏற்பட்டது. அதன்பின் மெய்சி(Meiji) புரட்சி ஏற்பட்டு நவீன யப்பான் உருவானது. மிக வேகமாக வளர்ந்து 1905இல் இரசியாவைத் தோற்கடித்த யப்பான், இரண்டாம் உலகப்போரில் தோல்வியுற்றது. எனினும் இன்று ஒரு பெரும் பொருளாதார வல்லரசாக ஆகியுள்ளதுசான்று:The World Book Encyclopedia, USA, 1988, vol-11, page: 53-60.

கொரியா(கி.மு.100-1630):கி.மு. 100க்கு முன் கொரியர்கள் இனக்குழு நிலையில் வாழ்ந்தனர். கி.மு. 108இல் சீனா, கொரியாவின் வடபகுதியைக் கைப்பற்றுகிறது. கி.மு. 75இல் அதன் பெரும்பகுதியை விடுவித்த கொரியர்கள் கி.பி. 200வாக்கில் பல இனக்குழுக்கள் இணைந்து, கோகுர்யோ(Koguryo), பீக்சீ(Paekche), சில்லா(Silla) ஆகிய மூன்று அரசுகளை உருவாக்கினர். கி.பி. 300 முதல் 400க்குள் அங்கு புத்தமதம் பரவுகிறது. கி.பி. 660இல் சில்லா அரசு மீதி இரு அரசுகளையும் கைப்பற்றுகிறது. கி.பி. 932இல் உடைந்து போன சில்லா அரசு, ஒருங்கிணைந்து கொர்யா ஆகிறது. அதிலிருந்துதான் கொரியா(Korea) என்ற பெயர் உருவானது. கி.பி. 1234இல் புத்தகத்தை அச்சடிக்க நகரும் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

மங்கோலியர்கள் 1259இல் கொரியாவை கைப்பற்றினர். 1388இல் ஈசாங்கீ(Yisonggye) என்ற தளபதி கொரியாவை விடுதலை செய்தார். 1392இல் அவர் கொரியாவின் அரசர் ஆனார். அவரது வம்சம் 1900 வரை ஆண்டது. சீனாவின் மஞ்சு அரசு கி.பி. 1630இல் கொரியாவைக் கைப்பற்றியது. அதன்பின் கொரியா அரசு மஞ்சு அரசுக்கு கி.பி. 1800 வரை திறை செலுத்தி வந்தது. கி.பி. 1600 முதல் கொரியா அரசு, 200 வருடங்களுக்கு வெளிநாட்டு அரசுகளைத் தடை செய்தது. 1876இல் யப்பான் கொரியாவை மிரட்டி வணிகத்துக்கு சில துறைமுகங்களைத் திறந்து விடச்செய்தது. 1894-95இல் நடைபெற்ற சீனா – யப்பான் போரில் வெற்றிபெற்ற யப்பான் 1910இல் கொரியா முழுவதையும் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்தது. பின் இரண்டாம் உலகப்போரில் வடக்குப்பகுதியை இரசியாவும் தென்பகுதியை அமெரிக்காவும் கைப்பற்றியதால் அவை இரு நாடுகளாகின.

சான்று: The World Book Encyclopedia, USA, 1988, vol-11, p

இசுரேலிய, அமெரிக்க நாகரிகங்கள் – அஇசுரேலிய நாகரிகம்(கி.மு.1020-63):

பண்டைய உலக நாகரிகங்கள் – 18

மெசபடோமியாவில் ஆடு மேய்ப்பவனாக இருந்த ஆபிரகாம்(Abraham), கி.மு. 1900 வாக்கில் கானான்(பாலசுதீனம்) பகுதியில் வந்து தங்கிய யூதர்களின் முன்னோன் ஆவான். அவனது வழிவந்த இசுரேலின் 12 குலங்களும் தான் யூதர்கள். கானானில் பஞ்சம் ஏற்பட்டபோது எகிப்து சென்று அவர்கள் வாழ்ந்தனர். பல காலம் நல்லமுறையில் வாழ்ந்த அவர்கள் பின்னால் எகிப்திய மன்னர்களால் அடிமைகளாக்கப்பட்டனர். கி.மு. 1200இல் மோசசும்(Moses) அவன் மகன் சோசெப்பும்(Joseph) அவர்களை இசுரேலுக்கு மீண்டும் அழைத்து வந்தனர்.மோசசு மூலம் அவர்களுக்கு இறைவன் வாழ்வதற்கான 10 கட்டளைகளையும் பிற விதிகளையும் வழங்கினான். 2

00 வருடம் அவர்கள் கானானில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளப் போராடினர். கி.மு. 1020அளவில் 12 குலங்களும் ஒன்றிணைந்து தங்களுக்கான அரசை உருவாக்கினர். அவர்களது அரசன் டேவிட்(David) கி.மு. 1000வாக்கில் செருசலம் நகரத்தை கைப்பற்றி இசுரேலின் தலைநகர் ஆக்கினான். அவனது மகன் சாலமன்(Solomon), செகோவா(Jehovah) கடவுளுக்குக் கோயில் எழுப்பி புகழ்பெற்ற அரசனாக இருந்தான். இக்காலத்தில் கடவுளின் கட்டளைகளை எழுதி அதற்கு டோரா எனப் பெயரிட்டனர். டோரா தான் யூதமதக் கொள்கையின் அடிப்படை. கி.மு. 900வாக்கில் இசுரேல் அரசு வட, தென் பகுதியாகப் பிரிந்தது. தென்பகுதி யூடா(Judah) எனவும் வடபகுதி இசுரேல் எனவும் அழைக்கப்பட்டது. யூடாவின் தலைநகராக செருசலம் இருந்தது.

கி.மு. 700இல் அசிரியர்கள் வட இசுரேல் அரசைக் கைப்பற்றினர். அதன் 10 குலங்கள் இல்லாது போயின. தென்பகுதி யூடாவில் இருந்த இரு குலங்கள் தப்பின. அவர்கள் தங்களை யூதர்கள் என அழைத்துக்கொண்டனர். கி.மு. 586இல் பாபிலோனியர்கள் தென்பகுதி யூடாவைக் கைப்பற்றி அழித்து அனைவரையும் அடிமையாக்கி பாபிலோனியா அழைத்துச்சென்றனர். பின் அதில் பலர் திரும்பி வந்து தங்கள் கோயிலைப் புதுப்பித்தனர். ஆனால் மீண்டும் அலெக்சாண்டர், எகிப்தின் டாலமி, சிரியன்கள் எனப் பலர் அவர்களை ஆண்டனர். பின் 100 வருடம் சுதந்திரமாக இருந்தனர்.

கி.மு. 63இல் உரோம் அவர்களைக் கைப்பற்றியது. பலர் அடிமைகளாக உரோமுக்கு அனுப்பப்பட்டனர். பின் கி.பி. 66-73, 132-135 ஆகிய ஆண்டுகளில் உரோமை எதிர்த்து கலகம் செய்தபோது யூதர்கள் கடுமையாக அடக்கப்பட்டனர்.கி.மு. 586இல் பாபிலோனியர்கள் அவர்களை அடிமையாக்கியதிலிருந்து அவர்கள் உலகம் முழுவதும் பரவி வாழத் தொடங்கினார்கள். உரோம் காலத்தில் இது மேலும் அதிகமாகியது. கி.பி. 1000 – 1300 வாக்கில் சுபெயின் முசுலீம் நாடாக இருந்தபோது அங்கு வாழ்ந்த யூதர்களில் மிகச்சிறந்த அறிஞர்கள் பலர் தோன்றினர். அது யூதர்கள் வரலாற்றில் பொற்காலம் எனப்படுகிறது. ஆனால் கி.பி. 1492இல் யூதர்கள் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார்கள்.

அதன்பின் அவர்கள் உலகம் முழுவதும் குடியேறி வாழ்கிறார்கள். செர்மனியின் இட்லரால் 60 இலட்சம் யூதர்கள் 20ஆம் நூற்றாண்டில் படுகொலை செய்யப்பட்டர்கள். அதன்பின் மேற்கத்திய நாடுகளின் ஆதரவில் உலக யூதர்கள் ஒன்றிணைந்து பாலசுதீனத்தில் 1949இல் தங்களது இசுரேல் நாட்டை உருவாக்கினர். யூதர்கள் செமிடிக் இனத்தவர். அவர்களது மொழி இப்ரு(Hebrew).

சான்று: 1.The World Book Encyclopedia, USA, 1988, vol-11, page: 93-100, 117-123 2. Ancient Cities – The Archaeologey of urban life in the Ancient Near East and Egypt, Greece and Rome. By Charles Gates 2nd Edition, page: 423-424).