Fri. Mar 29th, 2024

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவச் சிலை இன்று மாலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முழு உருவச்சிலையை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 12 அடி உயர பீடத்தில்,16 அடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையின் கீழே கலைஞர் மு. கருணாநிதியின் 5 கட்டளை வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.

அண்ணா வழியில் அயராது உழைப்போம்…

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்….

இந்தித் திணிப்பை எதிர்ப்போம்….

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்….

மாநிலத்தில் சுயாட்சி-மத்தியில் கூட்டாட்சி….

கலைஞரின் சிலையை திறந்து வைத்த குடியரசுத் துணைத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பாலு எம்பி ஆகியோர் கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவில், எம்பிக்கள் கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்பி, நடிகர் ரஜினிகாந்த், ராஜாத்தி அம்மாள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.