Sun. May 19th, 2024

ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி வழக்கில் தமிழக காவல்துறை முதல் குற்றவாளி
கிங் சுக்தேவ் சர்மாவை மேற்கு வங்கத்தில் கைது செய்துவிட்டதாக நேன்றைய தினம் செய்தி வெளியிட்டது. ஆனால் இன்று அந்த குற்றவாளி முன்ஜாமீன் பெற்றுள்ளதால் கொல்கத்தா நீதிமன்றம் குற்றவாளியை விடுவித்து விட்டதாகவும் காவல் துறை கதை சொல்கிறது.

இவ்வழக்கில் காவல்துறை ஆரம்பம் முதலே குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கோடு தான் செயல்பட்டுள்ளது எனவும் எனவே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றவேண்டும் எனவும் ஜனநாயக மாதர் சங்கம் 25.3. 22 அன்று நடத்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கோரிக்கையை முன் வைத்தது.

26.3. 22 ல் கோட்டூர்புரம் காவல் நிலைய ஏசி விசாரணை அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. மீடியாக்களின் வெளிவந்த செய்திகளால் கடுமையான நிர்பந்தத்திற்குள்ளான காவல்துறை
சிறப்புப்படை ஒன்றை குற்றவாளிகளை கைதுசெய்ய மேற்குவங்கம்
அனுப்பியதாக செய்தி வெளியிட்டது. நேற்றைய தினம் முதல் குற்றவாளி கைது செய்துசெய்யப்பட்டு கொல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அவர் முன்ஜாமீன் பெற்றிருந்ததால் நீதிமன்றம் அவரை விடுவித்ததாகவும் காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வழக்கில் முக்கிய பிரிவான IPC 376, மற்றும் SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம் இரண்டிலும் வழக்கு பதிவு செய்யாமல் கோட்டூர்புரம் காவல்துறை முன்ஜாமீன் பெற்றுள்ள பழைய வழக்கில் அவரை கைது செய்வதற்காக மேற்குவங்கம் விரைய வேண்டிய அவசியம் என்ன?
இது மக்களை ஏமாற்றும் ஒரு கண்துடைப்பு வேலையே என ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டுகிறது.
எனவேதான் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இவ்வழக்கில் தமிழக காவல்துறையின் ஒவ்வொரு செயல்பாடும் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கோடு உள்ளது எனவும் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரியது.

எனவே இத்தகைய முக்கியமானதொரு வழக்கில் தமிழக முதல்வரே தனி கவனம் செலுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு
நீதி பெற்றுத்தர உதவிட ஜனநயக மாதர் சங்கம் தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறது.