Sat. May 4th, 2024

முதல்வரின் துபாய் பயணம் குறித்த எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்திற்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். அதன் விவரம் இதோ:

கட்டணம் செலுத்திய திமுக

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முதலமைச்சர் மேற்கொண்டு இருக்கக்கூடிய துபாய் வெளிநாட்டு பயணத்தைக் குறித்து இன்றைக்கு விமர்சனம் செய்து பேட்டியினை கொடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் தனி விமானத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது அவர் விமான பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிற சூழ்நிலையில், விமான வசதிகள் அதற்கான இருக்கைகள் கிடைக்காத காரணத்தினால், தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்பாடு செய்த அந்த தனி விமானத்திற்குக் கூட இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டிருக்கிறதே ஒழிய, இன்றைக்கு அரசாங்கத்தினுடைய நிதி செலவழிக்கப்படவில்லை என்பதை நான் முதலிலே தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டு மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்

இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டியிருக்கிறார். முதலமைச்சருடைய இந்தப் பயணம் என்பது முதலீடுகளை ஈர்ப்பதற்காக மாத்திரம் அல்ல, அயலகத்திலே கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வியர்வை சிந்தி உழைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒவ்வொரு தமிழ்க் குடும்பத்தினுடைய வளத்திற்காகவும், வாழ்விற்காகவும் அவர் இந்தப் பயணத்தை இங்கே மேற்கொண்டிருக்கிறார். நேற்று முன்தினம் இங்கு வந்திருக்கக்கூடிய அவருக்கு தமிழ்ச் சமுதாயம் அளித்திருக்கக்கூடிய வரவேற்பை நாட்டு மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

சரியான வாய்ப்பு

இன்னொன்றையும் அவர் சொல்லியிருக்கிறார். நம்முடைய உலக வர்த்தகப் பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயில் முதலமைச்சர் அவர்கள் வந்திருக்கிறார் என்று, இது கோவிட் காலத்தினாலேயே தள்ளிப்போய் வந்திருக்கிறது. இன்னொன்று இது ஆரம்பிக்கும்போது வந்திருக்கக்கூடிய வரவேற்பைவிட, முடியும் பொழுது தான் மிகப் பெரிய கூட்டம் வந்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் தான் உலகின் பல பகுதியிலிருந்தும் இங்கே வந்திருந்தார்கள். இந்தச் சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் அது சரியான ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை முதலமைச்சர் உணர்ந்து தான் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்.

ரூ.6200 கோடி முதலீடு

எடப்பாடி பழனிச்சாமி தொழில் முதலீடுகள் குறித்து பேசியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது, அவர் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டுப் பயணங்களினால் எத்தனை ஆயிரம் கோடி முதலீடுகள் வந்தது. இன்றைக்கு முதலமைச்சர் இந்த மூன்று நாட்களில் துபாய், அபுதாபி பயணங்களில் ஏறத்தாழ 6,200 கோடிக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளார். வெற்றிகரமான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். கடந்த ஆட்சியில் அவர்கள் மேற்கொண்ட பயணத்தின் வாயிலாக ஈர்த்தாக சொல்லப்படும் முதலீடுகள் குறித்து சட்டமன்றத்தில் நான் மிகத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறி அவையெல்லாம் அவை குறிப்பில் இடம் பெற்றிருக்கிறது.

இந்தியாவிற்கே எடுத்துக்காட்டு

இன்னொன்று, சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசியிருக்கிறார். அதிமுக ஆட்சியில் குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபொழுது, சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சந்தி சிரித்தது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். விருதுநகர் பாலியல் வழக்குக் குறித்துக்கூட பேசியிருக்கிறார். இது குறித்து நமது முதலமைச்சர் சட்டமன்றத்திலே தெளிவாக விளக்கம் சொல்லியிருக்கிறார். இந்த வழக்கில் சிபிசிஐடி தனி அதிகாரியை அவர் நியமித்து முழுமையாக முடிப்பதற்கும், இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி 60 நாட்களுக்குள்ளாக சார்ஜ் ஷீட் போட்டு அவர்களுக்கு அதிகபட்சமான தண்டனை பெற்றுத் தருவதோடு, இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் இந்தியாவிற்கே இது எடுத்துக்காட்டான பாலியல் வழக்கை விசாரிக்கக்கூடிய வழக்காக இது அமையும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

மக்கள் நிராகரிப்பார்கள்

எனவே இந்த வழக்கைக் குறித்தெல்லாம் அவர்கள் தேவையில்லாத கருத்துக்களைச் சொல்லி வருகிறார்கள். நியாயமான முதலமைச்சராக இருந்து அவர் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கக்கூடிய புகழை, அந்த வரவேற்பை பொறுத்துக்கொள்ள முடியாமல் இத்தகைய புழுதிகளை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இறைத்துக் கொண்டிருக்கிறார். இதை நம் நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்.

இவ்வாறு தொழில்துறை தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.