Fri. May 17th, 2024

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியிருக்கிறது. இதனை கொட்டும் மழையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், மழை நீரை உடனுக்கு உடன் வெளியேற்ற பாடுபட்டு கொண்டிருக்கும் அனைத்து துறை ஊழியர்களையும் உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

பகல் நேரங்களில் ஆய்வு செய்தது மட்டுமின்றி இரவு நேரங்களிலும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

அனைத்து துறை பணியாளர்களுக்கும் முதல்வர் நன்றி

முதல்வர் மு.க.ஸ்டாலினின் டிவிட்டர் பதவி இது:

சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மி.மீ மழை பதிவாவது இதுதான் நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகள்தான். அவர்களுக்கு நாம் எத்தனை நன்றி கூறினாலும் போதாது!

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களோடு முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்!

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.