Fri. May 17th, 2024

மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிரதாபராமபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்ற அவர், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து திருக்குவளைக்குச் சென்ற அவர், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியின் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். தற்பொழுது அந்த இல்லம், அஞ்சுகம் முத்துவேலர் படிப்பகமாக செயல்பட்டு வருகிறது. மேலும், அங்கிருந்த தனது தாத்தா, பாட்டி, மற்றும் முரசொலி மாறன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

பின்னர் அங்குள்ள பார்வையாளர்கள் பதிவேட்டில் தலைவர் கலைஞர் பிறந்த ஊரில், பிறந்த வீட்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி ஒன்றிணைந்து செயல்பட்டு தமிழகத்தை காப்போம் என்று எழுதி கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வின் போது, நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் என். கௌதமன், திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி.கே. கலைவாணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விவசாய அணி மாநில செயலாளருமான ஏ.கே. விஜயன், சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சருமான உ.மதிவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், திருக்குவளை கிளைக் கழகச் செயலாளர்கள் கோசி.குமார், எல்.பி. கரிகாலன் உள்ளிட்ட மற்றும் பலர் உடனிருந்தனர்.