Tue. May 14th, 2024

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி.

இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரையில் விரிவான பதிவிட்டுள்ளார். அதன் விவரம் இதோ….

சமீபத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியையும், அன்னை சோனியா காந்தியையும் தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்தி, தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் வகையில் சீமான் பேசி வருகிறார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவாக சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கம் பகிரங்கமாக செயல்பட்டு வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவோடு தொடர்புடைய சற்குணன் என்கிற சபேசன் தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சற்குணனுக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை சீர்குலைக்கிற வகையிலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் கொடுக்கிற முறையிலும் செயல்படும் சீமானை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.