Thu. Apr 25th, 2024

திரைப்பட நடிகர்கள், தங்கள் ரசிகர்களை பட வெளியீட்டு விழாவின் போது மட்டுமே நினைப்பார்கள். மற்ற நேரங்களில் அவர்களைப் பற்றிய சிந்தனையே இருக்காது. அதுவும் குறிப்பாக வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கில் செலவு செய்து சென்னைக்கு வந்த நடிகர்களின் வீடுகளைத் தேடி சென்றாலும் கூட பெரும்பாலான நேரங்களில் அவர்களை சந்திக்க கூட விரும்பாமல் வீட்டிற்குள்ளே இருந்து கொண்டு வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டதாக கூறி விரட்டி விடுவார்கள்.

அறிமுக நடிகர்களைத் தவிர, இரண்டு மூன்று வெற்றிப் படங்களை கொடுத்து விட்ட பிறகு புதுமுக நடிகர்களின் பந்தாவைப் பார்த்து, அவரது ரசிகர்கள் மனம் வெதும்பி போதுவதுதான் வாடிக்கை. அறிமுக நடிகர்களின் பந்தாவே இப்படியிருக்கும் போது, முன்னணி கதாநாயர்களை திரைப்படங்களில் மட்டுமே பார்த்து அவரது ரசிகர்களால் ரசிக்க முடியும் என்பதுதான் யதார்த்தமான நிலைமை. ஆனால், உச்சத்திற்கு சென்ற பிறகும் கூட ஒன்றிரண்டு நடிகர்கள், ரசிகர்களை தேடிப் போய் சந்திப்பதும், நேரம் இருக்கும் போது, வீடு தேடி வரும் ரசிகர்களை சந்தித்து பேசுவதுடன், அவர்களது செலவுகளுக்கும் பணம் கொடுத்து அனுப்பி வைக்கும் நடிகர்களும் ஒரு சிலர் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்பதுதான் வியப்பிற்குரிய செய்தியாகும்.

இப்படிபட்டவர்களின் மத்தியில் வித்தியாச மனிதராக இருக்கிறார் விஜய் ஆண்டனி என்பதுதான் பலரின் புருவங்களை உயர வைத்துக் கொண்டிருக்கிறது.

இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, நடிகராக அடுத்த அவதாரம் எடுத்த போது, அவரது படங்கள் சி சென்டர் என்று சொல்லப்படும் சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் அதிகளவு வரவேற்பு பெற்றது. குறிப்பாக பெண்கள் அதிகளவு அவரது படத்தை ரசித்து பார்த்தனர். அந்தளவுக்கு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், ஆபாசம் இன்றியும் திரைப்பட கதையை வடிவமைப்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறார் விஜய் ஆண்டனி.

திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த பிறகும் கூட, அவரது இயல்பான குணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை, தனது அதிதீவிர ரசிகரின் திருமண விழாவில் கலந்து கொண்டபோது அவர் வெளிப்படுத்திய மாண்பை கண்டு, ஒட்டுமொத்த பொதுமக்களும் வியப்பில் ஆழ்த்தனர்.

அவர் கலந்து கொண்ட திருமண விழா பரபரப்பாக பேசப்பட்டதற்கு காரணம் என்ன? விஜய் ஆண்டனியின் தீவிர ரசிகர் பீர் முகமது. விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களின் துவக்க விழா, வெளியீடு என்று எந்த விழாவாக இருந்தாலும் முதல் ரசிகராக பட போஸ்டர் ஒட்டுவது, திரையரங்கத்தின் முகப்பை அலங்கரிப்பது என்று வரிந்துகட்டிக்கொண்டு களப் பணியாற்றக்கூடியவர்.
இவருடைய மகள் திருமணம் அண்மையில் சென்னையில் நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர் விஜய் ஆண்டனி, எளிய மனிதராக நடந்து கொண்டு மணமக்களை உள்ளம் மகிழ்ந்து வாழ்த்தினார். விழாவில் முக்கிய பிரமுகர் போல் இல்லாமல் திருமண வீட்டார் போல் வெகு நேரம் அங்கிருந்து விழாவுக்கு வந்த விருந்தினர்களிடம் சகஜமாக பேசி விழாவை சிறப்பித்தார்.

நடிகர் என்ற பந்தா துளியும் இல்லாமல் எளிமையாக விஜய் ஆண்டனி நடந்து கொண்டதைப் பார்த்து திருமண விழாவில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும், தாம் காண்பது கனவா, நனவா என தத்தம் கைகளை கிள்ளிப் பார்த்துக் கொண்டார்கள். ரசிகர்களை ஆராதிக்கும் விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கை கொடிகட்டி பறக்க வேண்டும் என திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள் மனமார வாழ்த்தினார்கள் என்பதுதான் ஹை லைட்…