Thu. May 2nd, 2024

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது தொடர்பாக ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதுதொடர்பாக உடனேயே கருத்து தெரிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வருகிறது என்பதற்காகவே விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரின முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதோ….

சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தும், அதை எதிர்த்து, “கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது” என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு – தடை உத்தரவு பெற்ற முதலமைச்சர் பழனிசாமி, தேர்தல் என்றதும், பதவி பறிபோகப் போகிறதே என்ற பயத்திலும் பதற்றத்திலும், திடீர் ஞானோதயம் பிறந்து, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்திய நேரங்களிலெல்லாம் எள்ளி நகையாடிய முதலமைச்சர், இப்போது தோல்வியின் விளிம்பிற்கே வந்து தொங்கிக் கொண்டுள்ள நிலையில் – இந்தக் கடன் தள்ளுபடி அறிவிப்பைச் செய்தாலும், விவசாயிகள் பயனடையும் இந்தக் கடன் தள்ளுபடிக்காக ஓய்வின்றிக் குரல் கொடுத்து வந்தது திராவிட முன்னேற்றக் கழகம்தான்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும், தற்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பயணத்தின் போதும் “விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி கொடுத்தது நான்தான். தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் திரு. பழனிசாமிக்கு நன்றி! இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்து முழுமை அடைய இன்னும் எத்தனை மாதங்கள் ஆகுமோ? மற்ற அறிவிப்புகளைப் போல, இதுவும் காற்றில் கரைந்து போய்விடுமோ?

மாணவர்களின் கல்விக் கடனையும் முதலமைச்சர் ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்; அதையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். அறிவிப்புதானே, அதுவும் கடைசிக் கட்டத்தில்தானே, தாராளமாகச் செய்யலாம். நான்கு ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பவர்களின் கடைசி நேர அறிவிப்புகளைக் கண்டு யாரும் மயங்கி ஏமாற மாட்டார்கள்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர்,கடந்த 2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றப்பட்டுவிட்டதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதன் விவரம் இதோ :

2011 ஆம் ஆண்டு அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பழனிசாமிக்கு நான் நினைவூட்டுகிறேன்.

* இரண்டாவது விவசாய புரட்சித் திட்டம் கொண்டுவருவோம் என்று அறிவித்தீர்களே! வந்ததா? இல்லை!

* விவசாயிகளின் வருமானத்தை இரண்டு அல்லது மூன்று மடங்கு உயர்த்துவோம் என்று அறிவித்தீர்களே? வருமானம் உயர்ந்ததா? இல்லை!

* எல்லா விவசாயக் கருவிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்போம் என்று சொன்னீர்களே! கொடுத்தீர்களா? இல்லை!

* கரும்புவிலையைப் போல மற்ற விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றீர்களே! நிர்ணயித்துவிட்டீர்களா? இல்லை!

* கரும்பு விவசாயிகளுக்குத் தரவேண்டிய பணத்துக்கு பாக்கி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே? அப்படித்தான் இப்போது நடக்கிறதா?

* சொட்டு நீர் பாசனத்தை அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகச் செய்து கொடுப்போம் என்றீர்களே? செய்து கொடுத்துவிட்டீர்களா? எதில் தமிழகத்தை வளர்த்துள்ளீர்கள்?

இரண்டே இரண்டு விஷயங்களில் தமிழகம் வளர்ந்துவிட்டது. ஒன்று ஊழல்! இன்னொன்று விலைவாசி! அதிகமான ஊழல் செய்யும் மாநிலம் எது? தமிழகம்! விலைவாசி உயர்ந்து கொண்டே போகும் மாநிலம் எது? தமிழகம்! இதுதான் பழனிசாமியின் சாதனை! இந்த வேதனையான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.