Sun. Apr 28th, 2024

கர்ப்பம் தரித்த உடும்பை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்த தயாரிப்பாளர் உஷா ராஜேந்தர்..அவரின் மனிதாபிமானத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

பிரபல பன்முக கலைஞர் டி.ராஜேந்தரின் மனைவியும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் டி.ஆரின் தாயாருமான உஷா ராஜேந்தருக்கு சொந்தமான டி.ஆர்.கார்டன் சென்னை மதுரவாயல் அருகே உள்ளது.

கடந்த சில நாட்களாக டி.ஆர்.கார்டனில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதனை ஒவ்வொரு நாளும் உஷா ராஜேந்தர் மேற்பார்வையிட்டு வருகிறார். இந்தநிலையில், ஒரு உடும்பு அந்த இடத்தில் பதுங்கி இருப்பதை கண்ட பணியாளர்கள் தயாரிப்பாளர் உஷா ராஜேந்தரிடம் உடனே தெரிவித்தனர்.அங்கு விரைந்து சென்ற அவர் உடும்பை பார்வையிட்டபோது, அது கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்தார். 

அந்த உடும்புக்கு எந்த தொந்தரவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற மனிதாபிமானத்துடன் மதுரவாயல் காவல் நிலையத்தை அணுகி உடும்பு இருப்பதாக அவர் கூறினார். அவர்கள் வேளச்சேரியில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுக்கு உடனே தகவலை தெரிவித்தனர். விரைந்து வந்த வனவிலங்கு அலுவலர்கள் பாதுகாப்பாக அந்த உடும்பை எடுத்து சென்றனர்.

தாய்மை குணத்துடன் உடும்பின் நிலை கண்டு உடனே தகவல் தெரிவித்த உஷா ராஜேந்தருக்கு காவல் துறையினரும், வனவிலங்கு அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.