Sat. Apr 27th, 2024

காவலர்கள் பொதுமக்களிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தற்போதைய டிஜிபி ஜெ.கே. திரிபாதி இன்றுடன் ஓய்வுப் பெறுவதையொட்டி, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திரபாபு ஐபிஎஸ் இன்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபு ஐபிஎஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக காவல்துறையின் தலைமை பொறுப்பில் பணியாற்றுவது ஓர் அரிய சந்தர்ப்பம். இந்த அரிய வாய்ப்பை எனக்கு தந்துள்ள தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

காவல்துறையை பொறுத்தமட்டில் சட்டம் ஒழுங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவலர்கள் பொதுமக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

மனித உரிமைகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும். அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.பொதுமக்கள் தரக்கூடிய மனுக்கள் குறிப்பாக “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்” மூலம் அளிக்கப்படும் மனுக்கள் 30 நாட்களில் விசாரித்து அறிக்கை அரசுக்கு அனுப்ப படும்.

காவலர்களின் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இலக்குகளை அடைய பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பத்திரிகை துறை, ஊடகத்துறை நண்பர்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தற்போது தான் பணியில் சேர்ந்துள்ளேன். காலபோக்கில் எங்கள் நடவடிக்கைகள் பேசும். இவ்வாறு டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.