Wed. May 8th, 2024

ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், அங்கு ஆட்டோ நகரம் அமைப்பதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்படவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இன்று செய்தியாளர்களை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி சந்தித்தார்..

அப்போது அமைச்சர் கூறியதாவது:

சி.எம்.டி.ஏ மூலம் நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து இடங்களிலும் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதேபோல், கோயம்பேடு அங்காடியை நாளை (ஜூன் 29) காலை ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.

வீட்டு வசதி துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு துறை அதிகாரிகள் உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும், கோரிக்கைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். இதனால், ஒவ்வொரு இடத்திலும் அலுவலகங்கள் ஏற்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளை நியமனம் செய்ய ஏற்பாடு செய்துள்ளோம்.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தொழிற்சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் 28 கோரிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. சி.எம்.டி.ஏ மற்றும் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு என ஒவ்வொரு துறையையும் ஆய்வு மேற்கொண்டு முன்னேற்ற பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் துணை நகரங்கள் அமைப்பதற்கான ஆய்வு பணி துவங்கப்பட்டுள்ளது. மாடல் நகரமாக அமைய வேண்டும் அந்த வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் இருக்கும் சிறப்பிற்கு ஏற்றார்போல் ஆட்டோ நகரம் உருவாக்கப்படும்.

சி.எம்.டி.ஏவில் வருகின்ற கோப்புகளை 60 நாட்களில் முடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பல வீடுகள் முறையான பராமரிப்பு பணி இல்லாமல் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கெல்லாம் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நீக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும், பணியாற்றும் ஊழியர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள், காலிப் பணியிடங்களை நிரப்புவது, பதவு உயர்வில் காலதாமதம், பணியாற்றும் ஊழியர்கள் இறந்துவிட்டால் வாரிசுதாரர்களுக்கு பணி அளிப்பது, ஓய்வூதியம் அளிக்க முறையான ஏற்பாடுகள் உள்ளிட்ட 28 கோரிக்கைகளையும் துறையின் செயலாளருக்கு அனுப்பியுள்ளதாகவும், ஒவ்வொரு கோரிக்கையின் மீதும் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.