Fri. May 10th, 2024

100 ஆண்டில் இல்லாத பெருந்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கொரோனோவுக்கு எதிரான போரில் இந்தியா வலிமையாக போராடி வருவதாகவும், நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

‛மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நமது நாடு, கொரோனா தொற்றை எதிர்த்து வலிமையுடன் போராடி வருகிறது.

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பெருந்தொற்றாக கொரோனா உள்ளது.

அதேநேரத்தில், இயற்கை பேரிடர்களையும் இந்தியா எதிர்கொண்டு உள்ளது.

அம்பான் புயல், நிசார்க் புயலையும் எதிர்கொண்டோம்; பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது.

சிறிய நில நடுக்கமும் உண்டானது; நிலச்சரிவும் வந்தது.

பெருந்தோற்று காலத்திலும் இயற்கை பேரிடரை மிக வெற்றிகரமாக இந்தியா சமாளித்துள்ளது.

எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும், உறுதியுடன் அதனை சமாளிப்போம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

கடந்த 10 நாளில் இந்தியா இரண்டு புயல்களை சந்தித்தது. டக்டே புயல் கிழக்கு கடற்கரையையும், யாஸ் புயல் மேற்கு கடற்கரையையும் தாக்கியது. இதில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டன.

நாடும், மக்களும், வலிமையுடன் புயலை எதிர்த்து போராடி, உயிரிழப்பை குறைத்தனர்.

புயல், மழை காலங்களில் துணிச்சலோடு மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள் உற்றார் உறவினரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த சில நாட்களாக, டாக்டர்கள், நர்சுகள் மற்றும் முன்கள பணியாளர்கள் இரவு பகல் பாராமல் தன்னலம் பாராமல் உழைத்ததை பார்த்தோம்.

இன்னமும் அவர்கள் உழைத்து வருகின்றனர்.

இவை அனைத்திலும் முக்கிய பங்கு வகித்த பலர் உள்ளனர்.

அதேநேரத்தில், இந்த கொரோனா இரண்டாவது அலையின் போது மக்களுக்கு உதவுவதில் இன்னும் சிலர் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உள்ளனர்.

அவர்கள் குறித்து குறிப்பிட வேண்டும் என மக்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

இரண்டாவது அலை இந்தியாவை தாக்கிய போது, ஆக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது.

வெகு தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பெரிய சவாலாக இருந்தது.

தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது.