Fri. May 17th, 2024

தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை உறுப்பினர்கள் பூச்சி எஸ். முருகன் நடிகர் நாசர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் இன்று செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதனை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது நடிகர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து விரிவாக விளக்கி கூறியதுடன், கோரிக்கை மனு ஒன்றையும் அமைச்சரிடம் அளித்தனர்.

கோரிக்கை மனுவில் உள்ள விவரங்கள்

                           1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு எம்.ஜி.ஆர்.,முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர் என பெரும் மேதைகளால் வளர்க்கப்பட்டது நமது தென்னிந்திய நடிகர் சங்கம். பெரும் சட்ட போராட்டத்தின் விளைவால், 30 ஆண்டுகளுக்கு பின் கடந்த 2015 ஆம் ஆண்டு சங்கத்தில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட்டு நடிகர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சீருடனும் சிறப்புடனும் நடைபோட்டது. 

200 கோடி ரூபாய் மதிப்புள்ள  நடிகர் சங்க இடத்தை மீட்டெடுத்து அந்த இடத்தில் புதிய கட்டடத்தை கட்டும் பணிகளை மேற்கொண்டோம். 30 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் 75 சதவீத கட்டட பணிகள் முடிந்துவிட்டது. 

  ஆனால் 2019 ஆம் ஆண்டு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சில நயவஞ்சகர்களின் சூழ்ச்சியால் எண்ணப்படாமல் முடங்கி இருக்கின்றன. 3122 உறுப்பினர்கள் கொண்ட நடிகர் சங்கத்தில் 2300க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்படும் சினிமா, நாடக நடிகர்கள் தான். 

அந்த நலிவுற்ற நாடக, சினிமா நடிகர்களுக்கு நடிகர் சங்கம் மூலம் மாதாமாதம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது. அது அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் அதுவும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா காலத்தில் மட்டும் 50 க்கு மேற்பட்ட நாடக, சினிமா நடிகர்கள் இறந்துள்ளனர். அவர்களுக்கும் உதவித்தொகை வழங்க முடியவில்லை.  

தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கடும் பொருளாதார சிக்கலில் இருப்பவர்கள். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து தவித்துவருகின்றனர்.

தற்போது பதவியேற்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவார்கள் என்று நலிவுற்ற நாடக, திரைப்பட நடிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அவர்களுக்கு உதவும் வகையில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.

  1. கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் உதவித்தொகை.
  2. குடும்பம் பயன்பெறும் வகையில் ரேஷனில் 6 மாதங்களுக்கு உணவுப்பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும்.
  3. நலிந்த நடிகர்களின் வாரிசுகளின் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
  4. கொரோனா பாதித்து இறக்கும் நடிகர்களின் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  5. கொரோனா சிகிச்சையில் இருக்கும் நடிகர்களுக்கு காப்பீட்டு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றினால், கடும் சிரமத்தில் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். செய்தித்துறை அமைச்சர் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி நடிகர் சங்க உறுப்பினர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றி வைக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அதேபோல் நலிந்திருக்கும் நாடக நடிகர்களை காப்பாற்ற கடந்த ஏப்ரல் 30 ந்தேதி கலை மற்றும் பண்பாட்டு துறை இயக்குனர் கலையரசி ஐஏஎஸ்.ஸுக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் சில யோசனைகள் கூறி இருந்தேன்.

50 நாள் வேலை உறுதி திட்டம் – அரசு சார்பில் நாடகத்துக்காகவே பிரத்யேகமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் ஒவ்வொரு நாடகக்குழுவுக்கும் வாய்ப்பு தரலாம். மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியான திட்டமாக இருக்கும். நமது பாரம்பரிய நாடகக்கலை அழியாமல் பாதுகாக்கப்படும்.

இதில் வரும் விளம்பர வருவாயும் அரசுக்கு சேரும். தொடக்கத்தில் லாபம் தராவிட்டாலும் நேர்த்தியான நாடகங்கள் மூலம் மக்களை நமது சேனல் பக்கம் ஈர்க்கலாம். சில மாதங்களில் விளம்பர வருவாய் கிடைக்கும். தொடக்க காலத்தில் அரசின் விளம்பரங்களை கூட அதில் ஒளிபரப்பலாம்.

பொன்னியின் செல்வன் நாடகம் சென்னையில் போடப்பட்ட போது நல்ல வரவேற்பு இருந்தது. அதுபோல நேர்த்தியாக நாடகங்களை இயற்றும் குழுக்களை ஊக்கப்படுத்தலாம். இந்த நாடகங்களை அரசு தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பலாம்.

ஒவ்வொரு நாடகக்குழுவுக்குமே தனி யூடியூப் சேனல் தொடங்க வழி காட்டலாம்.
தமிழ் திரைப்படங்களில் நாடக நடிகர்களை அதிக அளவில் பயன்படுத்தும் படங்களுக்கு சிறப்பு சலுகைகள், மானியம் அறிவிக்கலாம். குறிப்பாக நாடகக் கலைஞர்களை பயன்படுத்தும் படக்குழுவின் படப்பிடிப்புக்கு எளிதில் அனுமதி வழங்கலாம்.

இவற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமான யோசனைகளை உடனடியாக நிறைவேற்றி ஆயிரக்கணக்கான நாடகக்கலைஞர்கள் குடும்பங்களின் வாழ்வாதார சிக்கலை தீர்த்து வைத்து உதவுமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூச்சி எஸ். முருகன் தலைமையிலான அறக்கட்டளை உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த செய்தித் துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு. பெ. சாமிநாதன் இந்த கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.