Sun. Apr 20th, 2025

கரோனா 2-வது அலையில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, பெரியார் நகர் புறநகர் மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

கரோனா இரண்டாவது அலையில் ஏன் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்? ஆக்சிஜன் தேவை ஏன் அதிகமாக உள்ளது? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. உதாரணத்துக்கு நாம் கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். அங்கே இளைஞர்களும் பொதுமக்களும் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

அவர்கள் லேசான கரோனா அறிகுறி தென்படும்போதே உடனடியாகப் பரிசோதனை மையத்துக்குச் சென்று சோதித்து விடுகின்றனர். நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வந்து விடுகின்றனர். இதனால் பாதிப்பும் ஆக்சிஜன் தேவையும் குறைவாக உள்ளது. அந்த விழிப்புணர்வுதான் எல்லா இடங்களிலும் தேவைப்படுகிறது.

கரோனா நோய் அறிகுறி வரும்போதே மக்கள் வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பரிசோதனை முடிவுகள் வரும் முன்பே மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். இதனால்தான் கேரள மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் சதவீதம் குறைவாக உள்ளது.

இளைஞர்களைப் பொறுத்தவரை தொற்று அதிகமாவதற்குக் காரணம் தமக்கெல்லாம் கரோனா ஏற்படாது என்று நினைத்துக் கொண்டு செயல்படுவதுதான். அறிகுறி தெரிந்ததும் பரிசோதனை செய்துகொள்ளாதது அவர்களின் பாதிப்பை அதிகப்படுத்துகிறது. எனினும் அறிவியல்பூர்வமான காரணத்தை ஐசிஎம்ஆர் தனியாக ஆய்வு செய்து தெரிவிக்கும்.”

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.