Tue. Jun 17th, 2025

தாரை வே இளமதி., சிறப்புச் செய்தியாளர்..

ஊரில் ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கிறது. இதை தூக்கிட்டு வந்துட்டான் என்று பலர் அனல் கக்கலாம். என்னுடைய தனிப்பட்ட பிரச்னையாக இருந்தாலும் கூட, ஊடகவியலாளர்களுக்கு தலைமை ஏற்கிற தகுதியை அடைவதற்கு கீழ்த்தரமான செயல்களை செய்து கொண்டிருக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் செல்வராஜினின் மறுபக்கத்தை அம்பலப்படுத்துவதற்காகவே, இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.

1988ல் தராசு அடையாளத்தை சுமந்த நான், ஏறக்குறையாக 35 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகவியலாளராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு தற்போது நேரிட்டிருக்கும் ஆபத்து, உயிர் பயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

அதுவும் இரண்டு பெண்மணிகளால்  என்பதுதான் அதிர்ச்சிக்குரிய ஒன்று.

2022 ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சென்னை வாணுவம்பேட்டையில் அடுக்குமாடி வீட்டிற்கு குடி பெயர்ந்தேன்.

வீட்டின் உரிமையாளரான கேரளாவை பூர்விகமாக கொண்ட சேதுலட்சுமி என்பவர், தேனொழுக பேசினார். அவரது இளம்வயது மகள், ஒன்றுமே தெரியாத சிறுபிள்ளையாக பாவித்தார். சேதுலட்சுமியின் புதல்வர் ஆஸ்திரேலியாவில் பணியாற்றி வருவதால், அங்கிருந்து வரும்  பணத்தில் பள்ளிக்கரணை, வாணுவம்பேட்டை, திருநீர்மலை சாலையில் குடியிருப்புகளை சொந்தமாக்கியுள்ளார்கள்.

வாணுவம்பேட்டை இல்லத்தில் குறைந்தது மூன்று, நான்கு ஆண்டுகள் குடியிருக்க முடியும் என்ற நம்பிக்கையோடுதான் சென்றேன். ஆனால், 6 மாதம் கடந்த பிறகு வீட்டை விற்கப் போகிறோம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார் சேதுலட்சுமி.

இந்த வீடு சரிபட்டு வராது என்று இரண்டொரு நாள் அலைந்து அதே பகுதியில் ஒரு வீட்டை பார்த்து, முன்பணம் கொடுக்கும் நேரத்தில் சேதுலட்சுமி, இப்போது வீட்டை விற்கும் எண்ணமில்லை. வேளச்சேரி மற்றும் பரங்கிமலையை இணைக்கும் பறக்கும் ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை விரைவாக பயன்பாட்டுக்கு வர இருப்பதால், சில ஆண்டுகள் கடந்து (அதாவது கூடுதல் விலைக்கு போகும் என்ற ஆசையில்) தான் விற்கப் போகிறோம். அதனால், நீங்களே தொடர்ந்து இருங்கள் என்றார்.

வீட்டு உரிமையாளர், அலைபாயும் மனதுடையவர் என்பதை யூகிப்பதற்குள் ஒரு வருடம் கடந்துவிட்டது. அவ்வப்போது, வீட்டை விலைக்கு வாங்கப் போகிறோம் என்று பலர், நேரம் கெட்ட நேரத்தில் வந்து தொல்லை கொடுத்த போதெல்லாம், அமைதி காத்தேன்.  

இந்த நேரத்தில் எங்கள் இல்லத்தில்  திருமண ஏற்பாடுகள் தொடங்கியதால் மே 21 ஆம் தேதி சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தோம். மே 25 ஆம் தேதி, சேதுலட்சுமி செல்போனில் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று தகவல் அனுப்பினார். வீடு காலி செய்யும் விவகாரத்தில் இருதரப்பும் 2 மாதத்திற்கு முன்பு தகவல் தர வேண்டும் என்பதுதான் நிபந்தனையாக இருக்கும் நிலையில், வீடு காலி செய்வது தொடர்பாக அப்பாவிடம் பேசுங்கள் என்று பதில் எனது புதல்வி தகவல் அனுப்பியவுடனேயே, வீட்டை உடனடியாக காலி செய்யாவிட்டால், உங்கள் வீட்டு முன்பு தற்கொலை  செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார் சேதுலட்சுமி.

கைபேசியில் அழைத்து, திடீரென்று வீட்டை காலி செய்யுங்கள் என்றால் என்ன நியாயம்..வாடகைக்கு வந்து 16 மாதங்கள் கூட ஆகவில்லை. திடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் எப்படி என்று கேட்டுவிட்டு, வீடு காலி செய்வது தொடர்பாக நீதிமன்றம் மூலம் தீர்வு காண்போம் என்று கூறி இணைப்பை துண்டித்தேன்.

3 நிமிடத்திற்குப் பிறகு அவரது மகள் ஸ்ரீஜா அழைத்து, தரக்குறைவான வார்த்தைளை பயன்படுத்தி அவரும் மிரட்டல் விடுத்தார். எனது கைபேசியில் பதிவு செய்யும் வசதியை பயன்படுத்தி கொள்ளாததால் மற்றொரு கைபேசியில் பதிவு செய்வதற்கு முயற்சி எடுத்த நேரத்தில் இணைப்பை துண்டித்து கொண்டார்.

இரண்டு பெண்களின் அநாகரிக செயலால் மன உளைச்சலுக்கு உள்ளானது மட்டுமின்றி, சொந்த ஊரில்  மேலும் பல நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால், சிவில் வழக்கு, குற்ற வழக்காக மாறிவிடக் கூடாது என்பதற்காக, நடந்த அனைத்தையும் புகாராக எழுதி, முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி வைத்தேன்.

போலீஸ் உதவி தேவைப்படும் என்பதால் கலைஞர் டிவி மூத்த செய்தியாளரும் தற்போதைய வின் டிவி செய்தியாளர் முருகனிடம் பேசிய போது, மடிப்பாக்கம் ஏஸி ரூபன் சார், ஊடகவியலாளர் பலருக்கு அறிமுகமானவர்தான். அவருக்கு தகவல் தெரிவிக்கிறேன். அச்சம் வேண்டாம் என்று நம்பிக்கையளித்தார்.

இதேநேரத்தில், பெண்கள் இருவரும் வசித்து வரும் பகுதி, தாம்பரம் காவல்துறை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டிற்குள் வருவதால், அந்த அலுவலகத்தில் இருந்து காவல் ஆய்வாளர் ஒருவர் தொடர்பு கொண்டு விசாரித்தார். இருபெண்களிடமும் விசாரணை நடத்திவிட்டு, சென்னைக்கு வந்தவுடன் வந்து பாருஙகள். திருமண ஏற்பாடு நடைபெறுவதாக கூறுகிறீர்கள். அதனை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதம் இறுதிவரை அவர்களை தொந்தரவு செய்யக் கூடாது என்று வீட்டு உரிமையாளர்களிடம் கண்டிப்புடன் கூறி விடுகிறேன் என்று ஆறுதலாக கூறினார்.

தலைவலி தீர்ந்தது என்று நினைத்திருந்த நேரத்தில், இரண்டு நாட்களுக்குப் பிறகு இரண்டு வாலிபர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு நான் குடியிருக்கும் வீட்டிற்கு சென்ற தாயும், மகளும், வீட்டின் கதவை தட்டி கலாட்டா செய்கிறார்கள்.  அசிங்கமான வார்த்தைகளில திட்டுகிறார்கள் என்று தகவல் கிடைத்தது.

இரண்டாவது மாடியில் அநாகரிகமாக நடந்து கொண்ட இருவரும், முதல் மாடியிலும், தரை தளத்திலும் அதே மாதிரியே நடந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த தகவல் கிடைத்தவுடன் தாம்பரம் காவல்துறை ஆணையர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படும் காவல் ஆய்வாளரை மீண்டும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தேன்.

உடனடியாக நிகழ்வு இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய அவர், வீட்டு உரிமையாளர்களை தொடர்பு கொண்ட போது, இருவரும் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் இருப்பதாக தகவல் தெரிவிக்கவே, அங்கு சென்ற அவர், மடிப்பாக்கம் உதவி ஆணையர்(ஏஸி)பிராங்ளின் ரூபன் அவர்களிடம் விவரத்தை தெரிவித்ததன்பேரில், ஊடகவியலாளர் நான் என்பதை அறிந்து, கைபேசி மூலம் என்னிடம் பேசினார். என்னை பார்த்திருக்கிறீர்களா என்று ஏஸி சார் கேட்க, நினைவில் இல்லை, நேரில் பார்த்தால் தான் சொல்ல முடியும் என்ற பதிலளித்த போது, வீட்டை காலி செய்து விட வேண்டியதுதானே என்று அவரும் தன் பங்கிற்கு அதிர்ச்சி கொடுத்தார். திடீரென்று சொன்னால் எப்படி சார் முடியும்.. சட்டப்படியே வீட்டை காலி செய்ய இரண்டு மாதம் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதுதானே முறை என்று சொன்னபோது, சரி.சரி. நேரில் வாருங்கள். பேசி முடிவெடுப்போம் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

அங்கிருந்து வெளியேறிய காவல் ஆய்வாளர், சேதுலட்சுமி, விசிகவினரை உடன் அழைத்து வந்திருக்கிறார் சார் என்று அதிர்ச்சி கொடுத்தார்.

சிவில் விஷயத்தை க்ரைம் விவகாரமாக மாற்றும் நோக்கத்திலேயே இருக்கிறார்கள் என்பது உறுதியானதால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல, நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகசெம்மலுக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தேன். சில நொடிகள் கூட தாமதிக்காமல் அவரும், வன்னி அரசு கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போதும் மனம் நிம்மதியடையாததால், ஊடகத்துறையில் சீனியர் மோஸ்ட் செய்தியாளர், 1980 காலகட்டத்திலேயே த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளராக பயணத்தை தொடங்கி, த ஹிந்து ஆங்கில நாளிதழில் பல தசாப்தங்கள் பணிபுரிந்து தற்போது ஃபிரண்ட் லைன் இதழில் அசோசியேட் எடிட்டர் பதவி வகித்து வரும் இளங்கோவன் சாருக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தேன்.

தொல் திருமாவளவன், ரவிக்குமார் எம்பி ஆகியோருடன் நெருக்கமான நட்பை பாராட்டி வரும் அவர், இருவருக்கும் தகவலை பகிர்ந்த போது, விசிக நிர்வாகிகள் யாரும் சென்ற மாதிரி தெரியவில்லை. சாதாரண கட்சி தொண்டர்களாக இருப்பார்கள். மீண்டும் தலையிடுகிறார்கள் என்றால் எங்கள் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் என்று விசிக தலைமையில் இருந்து அளித்த பதிலை தெரிவித்து என்னுடைய கவலையை போக்கினார் இளங்கோவன் சார்.

இந்த விவகாரத்தில் ஒரே நாளில் இரண்டு, மூன்று முறை பேசியதுடன் ஒருநாள் விட்டு ஒருநாள், போலீஸ் தரப்பில் இருந்து மீண்டும் ஏதாவது  விசாரணை நடைபெற்றதா?என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஜுன் 6, 7 தேதிகளில் சென்னை திரும்ப திட்டமிட்டிருந்த நேரத்தில், ஜுன் 2 ஆம் தேதி மாலை 70020 41932 என்ற எண்ணில் இருந்து வாட்ஸ் அப் காலில் அழைத்தவர், தான் ஆதம்பாக்கம் திமுக நிர்வாகி என்றும் வீட்டை எப்போது காலி செய்வீர் என்றும் மிரட்டலாக கேட்டார். வீடு காலி செய்வதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என எதிர்கேள்வி கேட்டபோது, வீட்டு உரிமையாளர் என்னிடம் பஞ்சாயத்து வைத்திருக்கிறார் என்று கூறவே, ஊரில் இருக்கிறேன். சென்னை திரும்பியவுடன் பேசுகிறேன் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தேன்.

மடிப்பாக்கம் காவல்துறை உதவி ஆணையரின் அறிவுரையை மீறி, சேதுலட்சுமியும் அவரது மகளும் சட்டவிரோத செயல்களை செய்ய துணிந்துவிட்டார்கள் என்பதை அறிந்தவுடன், மடிப்பாக்கம் ஏஸி ரூபன் சார், வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிறாரோ என்ற சந்தேகத்தை தீர்த்து கொள்வதற்காக, டைம்ஸ் ஆப் செல்வராஜை கைபேசியில் அழைத்தேன். இரண்டு மூன்று முறை அழைத்த போதும்  அவர் பேசவே முன்வரவில்லை. வாட்ஸ் அப்பில் தகவலை பகிர்ந்து  உதவும்படி கேட்டேன்.

5 நாட்களுக்குப் பிறகு நான் சென்னை திரும்பும் வரை செல்வராஜ் என்னை தொடர்பு கொள்ளவே இல்லை.

இதனிடையே, செல்வராஜுக்கு தகவல் தெரிவித்ததைப் போல, திமுக பிரமுகரின் மிரட்டல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் மூத்த செய்தியாளர் ஒருவரிடம் தகவலை பகிர்ந்தேன். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபலமான திமுக வழக்கறிஞர் கைபேசி எண்ணை கூறி பேசுங்கள், பிரச்னை தீர்ந்துவிடும் என்றார். அதன்படி, தகவல்களை பகிர்ந்ததையடுத்து, இன்றைய தேதி வரை 70020 41932 எண்ணில் இருந்து அழைப்பே வரவில்லை.

ஜுன் 6 ஆம் தேதி சென்னை திரும்பிய நான், மறுநாள் மடிப்பாக்கம் ஏஸி சாரின் விசாரணையை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியிருக்குமே, எப்படி பதில் அளிப்பது என்பதை தெரிந்துகொள்ள, செல்வராஜின் புறக்கணிப்பால் ஏற்பட்ட அவமானத்தை தாங்கி கொண்டு, மீண்டும் கைபேசியில் அழைத்தேன். அப்போது பேசிய செல்வராஜ், எவ்வளவு மட்டமானவர் என்பதை நிரூபித்தார். ஏஸியிடம் பேசிவிட்டேன். வீடு காலி செய்யும் விவகாரத்தில் அவர் தலையிடவே விரும்பவில்லை. ஆதம்பாக்கம் காவல்நிலைய இன்ஸ்பெக்டரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். நீங்கள் தைரியமாக போலீஸ் ஸ்டேஷன் செல்லுங்கள் என்று பச்சை பொய்யை கூறினார்.

அவரின் வார்த்தைகள் எனக்கு நம்பிக்கையளிக்காததால், உதவி ஆணையருக்கு அடுத்த நிலையில் உள்ள பரங்கிமலை துணை ஆணையர் அல்லது தெற்கு மண்டல இணை ஆணையர் ஆகியோரை சந்திப்பது என்று முடிவு செய்து, கிண்டி வந்து, ஜவஹர்லால் நேரு சிலை அருகில் வாட்ஸ் அப்பில் டைப் செய்த புகாரை, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொண்டு பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் நிர்வாகத்திற்குட்பட்ட தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ் சாரை சந்திப்பதற்காக ஜெராக்ஸ் கடைக்குச் சென்றேன். அங்குதான் எனக்கு அதிர்ஷ்டம் காத்துக்கொண்டிருந்தது.

சென்னை மாநகரில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் போலீஸ் உயரதிகாரிகளிடம் நெருங்கிய நட்பு பாராட்டி வரும் தம்பியும், BLUE PIX NEWS யூ டியூப் சேனல் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான H.LALITH  JUDE வை எதிர்பாராதவிதமாக சந்திக்க நேரிட்டது. கையில் இருந்த புகாரை வாங்கி பார்த்தவர், அண்ணா, ஜேஸி எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் (இணை ஆணையர்) எனக்கு மிகவும் பரிட்சயமானவர். நியாயமான கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பவர். வாருங்கள் நானே அழைத்துச் செல்கிறேன் என்று கூறியபோது, எனது ஒட்டுமொத்த ஊடக வாழ்க்கையில் ஏற்படாத நெகிழ்ச்சி, உடல் முழுவதும் பரவியது.

ஊடகத்துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்ட தம்பி JUDE வை  நன்றாக தெரிந்து வைத்திருந்த போதும், அவரிடம் அதிகமாக பழகியதே இல்லை. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக BLUE PIX NEWS எனும் யூ டியூப் சேனலை தொடங்கி அதன் தலைமை செய்தி ஆசிரியராக கடுமையான உழைப்பை செலுத்தி, தரமான செய்தி தொகுப்புகளை வெளியிட்டு வரும் நேரத்தில் கூட, ஒன்றிரண்டு செய்தி தொகுப்பை பார்த்துவிட்டுதான் போனில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்திருக்கிறேன்.

பரங்கிலையில் உள்ள காவல்துறை இணை ஆணையர் அலுவலகத்திற்குள் காலடி எடுத்த வைத்தபோதே Jude விற்கு உள்ள செல்வாக்கு தெரிந்தது. சில நிமிடங்கள் கூட காக்க வைக்காமல் இணை ஆணையர் திரு. எம்.ஆர். சிபி சக்கரவர்த்தி ஐபிஎஸ் அழைத்தார். Jude-வின் அறிமுகத்திற்குப் பிறகு புகாரை வாங்கி வாசித்தவர், அடுத்த நிமிடமே உதவி ஆணையர் ரூபன் சாரை அழைத்து, என்ன விசாரணை நடத்தினீர்கள் என்று கேட்டபோது, வீட்டு உரிமையாளரிடம் நடத்தியதை கூறிவிட்டு, ஜுன் 8 ஆம் தேதிதான் இருதரப்பையும் விசாரணைக்கு அழைத்திருக்கிறேன் என்று கூறவே, 24 மணிநேரத்திற்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். சட்டத்தை மீறுவோருக்கு இரக்கமே காட்ட கூடாது என்று எச்சரித்தார்.

சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ் சார் பற்றி ஏற்கெனவே, நான் பணியாற்றிய குமுதம் ரிப்போட்டர் மற்றும் ஜுனியர் விகடனில் வெளியான கட்டுரைகளை வாசித்து இருந்ததால், எனது புகாரை தவிர்த்துவிட்டு, பல்வேறு விஷயங்களை பேச அனுமதியளித்தார். நான் தனியாக சென்றிருந்தாலும் கூட இணை ஆணையர் என்னை சந்தித்து, பிரச்னையை தீர நடவடிக்கை எடுத்திருப்பார் என்றாலும் கூட, JUDE என்னை பற்றி கூறும்போது, சீனியர் சார்.. வீட்டு உரிமையாளர்களின் நடவடிக்கையால் மிகவும் மனம் நொந்து போய் இருக்கிறார் என்று கூறிய வார்த்தைகள்தான், இணை ஆணையர் அவர்களுக்கு எனது கோரிக்கையில் உள்ள நியாயத்தை எளிதாக உள்வாங்கி கொள்ள நம்பிக்கையளித்திருக்கிறது என்பதுதான் உண்மை.

ஒருவேளை இணை ஆணையர் விசாரிப்பில் நம்பிக்கை ஏற்படாமல் இருந்தால், அடுத்த கட்டமாக பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் ஐபிஎஸ் அவர்களையும் சந்திக்கவும் முயன்றிருப்பேன். அவரின் தலைமையின் கீழ் உள்ள காவல்துறை, பொதுமக்களின் குறைகளுக்கு செவிமடுக்கிறது என்பது இணை ஆணையர் அவர்களின் செயல்பாடுகளே உணர்த்திவிட்டது.  

ஜுன் 8 ஆம் தேதி பகல் 12 மணிக்குள்ளாவே மடிப்பாக்கம் உதவி ஆணையர் பிராங்ளின் ரூபன் சார், இருதரப்புக்கும் இடையேயான பிரச்னையை சுமூக முடித்து வைத்தவர், விடை பெறும்போது, உங்களைப் பற்றி ரிப்போட்டர் முருகன் நிறைய சொன்னார். மற்றவர்களும்கூட, ஜென்டில்மேன் நீங்கள் என்றுதான் கூறினார்கள் என்று கூறியபோது, ஒரே ஒரு முறை கூட செல்வராஜ் பெயரை சொல்லவே இல்லை. அவர் பேசியதாகவும் கூட தெரிவிக்கவில்லை.

செல்வராஜ் எனக்கு உதவி செய்யவில்லை என்பதற்காக நான் கோபப்படவில்லை. உண்மை எங்கிருங்கிறதோ, அங்கு தெய்வமே துணை நிற்கும் என்பதற்கு ஏற்ப தம்பி JUDE-வும், இணை ஆணைர் சிபி சக்ரவர்த்தி ஐபிஎஸ் சாரும் ஆறுதலை தந்தார்கள்.

ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பே திருச்சியில் பழக்கமான செல்வராஜ், இக்கட்டான நேரத்தில் நண்பராக உதவ முன்வரவில்லை என்பதைவிட, ஜனநாயக மரபுகளை மீறி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவராக தன்னை விளம்பரத்திக் கொள்வதில் காட்டும் அக்கறையில், ஒரு சில நிமிடங்கள் கூட எனக்கு உதவி புரிய முன்வரவில்லை என்பதுதான் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் விபத்தில் சிக்சி வியாசர்பாடி வீட்டில் ஓய்வெடுத்த போது 500 ரூபாய்க்கு ஆப்பிள் வாங்கிக் கொண்டு மந்தைவெளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று நேசத்தை வெளிப்படுத்தியவன். JUDE-வுக்கு ஒரு தேநீர் கூட வாங்கி கொடுத்ததில்லை.

ஆனால், இணை ஆணையரை சந்தித்துவிட்டு வெளியே வந்து போது உடல் தளர்ந்திருந்ததை உணர்வால் புரிந்து கொண்ட Jude வலுக்கட்டாயமாக வாகனத்தில் அழைத்துச் சென்று மதிய உணவை உட்கொள்ள செய்ய காட்டிய அன்பு, நானே எதிர்பாராத ஒன்று.

அதுபோலவே, நியூஸ் 7 நிர்வாக ஆசிரியர் தியாகசெம்மல், என் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தி வரும் சீனியர் மோஸ்ட் ஹிண்டு இளங்கோவன் சார் ஆகியோரிடமும் அடிக்கடி நேசத்தை வெளிப்படுத்தாத போதும் அவர்களிடம் இருந்து வெளிப்பட்ட உணர்வு, செல்வராஜிடம் துளியளவு கூட இல்லை என்கிறபோது, இவருக்கு எல்லாம் தலைவர் பதவி தேவைதானா..?. அதுவும் ஊடகவியலாளர்களுக்கு தலைமை ஏற்கிற தகுதி கொஞ்சமாவது இருக்கிறதா?என்பதுதான் கேள்வி.

இந்த கட்டுரையின் நோக்கங்களில் முதன்மையானது என்று நான் நினைப்பது, செல்வராஜ் தலைவராக உள்ள சென்னை பத்திரிகையாளர் சங்கத்திற்கு மறைமுகமாக நான் உதவிக் கொண்டிருக்கிறேன் என்று தமிழ் இந்து இணைய தளத்தின் ஆசிரியர் பாரதி தமிழன் நிர்வாகத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்திற்கு வந்து செல்லும் ஒன்றிரண்டு டூபாக்கூர்கள் செய்து கொண்டிருக்கும் பொய் பிரசாரத்தையும், இந்த செய்தி, தீயாக மாறி  கொளுத்தட்டும்.   

 செல்வராஜின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். விழித்துக் கொள்ளுங்கள் அப்பாவி ஊடகவியலாளர்களே…