Thu. May 2nd, 2024

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் 4- ஆம் நாள் இன்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது ஆட்டத்தை துவக்கியது. இந்திய அணி வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.

54.2 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப்பிடித்த இங்கிலாந்து அணி 164- ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதன் மூலம் இந்திய அணி 317- ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  

இந்திய அணியின் அக்‌ஷர் படேல், அஸ்வின் ஆகியோர் அபாரமாக பந்து வீசி, இங்கிலாந்து அணியை சொற்ப ரண்களில் வீழ்த்தி, இந்தியாவின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தனர்.

 2 வது டெஸ்ட் கடந்து வந்த பாதை

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்னும், ரஹானே 67 ரன்னும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்னும் எடுத்தனர்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின்(106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால்  286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.