Sat. May 18th, 2024

முல்லைப்பெரியாறு அணை152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கு பேபி அணையை பலப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பிஆர் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான பிரதிநிதிகள், சென்னையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து முல்லைப் பெரியாறு அணை பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளித்து எடுத்துரைத்தார்.

அமைச்சருடான சந்திப்புக்குப் பின்னர் பி.ஆர். பாண்டியன்செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது-.

மதுரை திண்டுக்கல் தேனி ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கோடு கேரள அரசாங்கம் செயல்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டேன்’குறிப்பாக எங்கள் கோரிக்கையை ஏற்று தமிழக நீராதார பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு புகழ்மிக்க சட்ட வல்லுனர்களை கொண்ட உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னதாக கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தோம் தற்போது ஏழு பேர் கொண்ட சட்ட வல்லுனர்களை தமிழக அரசு நியமித்து உள்ளது. இதனை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம் வாழ்த்துகிறோம்.

அக் குழு கடந்த ஒரு வார காலமாக முல்லைப் பெரியாரின் உரிமைகளுக்காக நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை நடத்தி தமிழக உரிமையை உறுதிப்படுத்துவதற்கு போராடி வருவதை தமிழக விவசாயிகள் சார்பில் பாராட்டினோம். தொடர்ந்து 152 அடி கொள்ளளவை உயர்த்துவதற்கும் பேபி அணையை பலப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினோம்.

குறிப்பாக ஆறு வருடங்களுக்கு மேலாக தமிழக பொறியாளர்கள் முல்லைப் பெரியாறு அணைக்கு சென்று வருவதற்கு தமிழக அரசால் வழங்கப்பட்ட அண்ணா படகு இரண்டும் கேரள அரசு அனுமதிக்காததால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என எடுத்துக் கூறினோம்.மும்முனை மின்சார இணைப்பு வழங்க வில்லை என்பதையும் அதை உடனடியாக பெற வேண்டும் என்று வலியுறுத்தினோம். இது இரண்டும் தற்போது என் கவனத்திற்கு வந்திருப்பதால் நான் விரைந்து நடவடிக்கை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்று சொல்லி இருக்கிறார்.

குறிப்பாக செயற்பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பொறியாளர்களும் அணை பகுதியில் தங்கி பணியாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதோடு உரிய பாதுகாப்பும் அதற்கான கேரள அரசின் அனுமதியும் பெற வேண்டும். அணைக்கு மத்திய அரசின் தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு பெற முயற்சிக்க வேண்டும் என்று எடுத்துக் கூறினோம்.இதனை பொறுமையாக கேட்டுக் கொண்ட அமைச்சர் முதலமைச்சர் தற்போது உரிய முறையில் கேரள முதலமைச்சருக் கடிதம் எழுதிஉள்ளார். இக்கடிதம் மூலம தமிழக விவசாயிகள் உரிமைக்கு உத்தரவாதம் படுத்துகிற வகையிலும், இரு மாநில உறவுகளை மேம்படுத்து நோக்கோடும் கடிதம் மூலம் முதலமைச்சர் கேரள முதலமைச்சருக்கு தெரிவித்துள்ளார். தமிழக விவசாயிகளுடைய தேவைகளையும் எடுத்துரைத்துள்ளார்.

எனவே அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக அரசு முல்லைப் பெரியாறு உரிமையை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

சென்னை மண்டல தலைவர் வி கே துரைசாமி,மண்டல செயலாளர் சைதை சிவா,உயர்மட்ட குழு உறுப்பினர் சுதாதர்மலிங்கம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் வைத்தியநாதன், செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.