Thu. May 9th, 2024

அதிமுக தேர்தல் பிரிவு துணைச்செயலாளரும் முன்னாள் ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதன் விவரம்: ஒன்பது மாவட்டங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு மத்திய அரசுப் பணியாளர்களை தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பிரச்சாரம் முதல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும், பறக்கும் படைகளை அமைத்து பணப் பட்டுவாடாவை தடுப்பதுடன் தேர்தல் பணிக்கு மத்திய ரிசர்வ் படையை அமர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை முன்வைத்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த மனுவை பரிசீலிக்க மாநிலதேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார்.

மேலும் அந்த மனுவில், சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட நிலையில், ஒன்பது மாவட்ட உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, பிரதான எதிர்கட்சியின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவை தெரிவிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் தொடர்ச்சிதான் இது எனவும் கடந்த தேர்தலின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மாநில தேர்தல் ஆணையம் அளித்த பதிலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் மட்டும் நேரடி வெப் காஸ்டிங் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலைப் போல ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றில் ஒரு வாக்குச்சாவடியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் வாக்குப் பெட்டிகளை, ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு செல்வதையும் அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்று கூறிய அவர், இந்த அம்சங்கள் பற்றி மாநில தேர்தல் ஆணையத்தின் பதிலில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்று புகார் தெரிவித்தார்

இதையடுத்து தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா? என்று கண்டிப்புடன் கூறிய தலைமை நீதிபதி கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுவது அவசியம் என்றும் கிராமங்களில் வீடியோ பதிவு அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

வெறும் ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால் என்ன நடைமுறைகளை மேற் கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி நாளை மதியம் 12 மணிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு கடும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.