Sun. May 5th, 2024

கொடநாடு வழக்கின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது..

கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையை சேர்ந்த ரவி என்கிற அனுபவ் ரவி இந்த வழக்கில் போலீஸ் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘கொடநாடு வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால் அவர்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்குமாறு பலதரப்பில் இருந்தும் எனக்கு மிரட்டல்கள் வருகிறது.

அரசு தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிந்த நிலையில் கோர்ட்டு அனுமதியின்றி மேல் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிடுவதுடன் மேல் விசாரணைக்கும் தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் போலீஸ் மேல் விசாரணை நடத்த அதிகாரம் உண்டு என்று தீர்ப்பு அளித்து ரவியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக ரவியின் சார்பில் வக்கீல் ஆனந்த் கண்ணன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார். அந்த மனுவில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தால் இந்த வழக்கை போலீஸ் மேல் விசாரணை செய்வது சட்டத்துக்கு புறம்பானது.

எனவே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை மேல் விசாரணை செய்வதற்கு போலீசுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கொடநாடு வழக்கு தொடர்பான அப்பீல் மனு உச்ச நீதிமன்றத்தில் வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.