Sat. Apr 27th, 2024

அதிமுகவினர் வெளிநடப்பு+தர்ணா+சாலை மறியல்+கைது+ பிற்பகலில் விடுவிப்பு…

ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதா தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்த சட்ட மசோதாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.

அதில் விழுப்புரம்,கடலூர்,கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.

2021ம் ஆண்டு டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழக சட்டத்தினை நீக்கறவு செய்வதெனவும் அரசு முடிவு செய்துள்ளது என கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் சட்டத்தை ஆரம்ப நிலையிலே எதிர்க்கிறோம் என கூறினார்.

தொடர்ந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அவையில் எழுந்து நின்று அமளி ஈடுபட்டனர் . பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த நிலையில் சென்னை, கலைவாணர் அரங்கம் முன்பு சாலையில் அமர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் விடுதலை செய்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு முறையில் நிறைவேறியது.

அமைச்சர் பொன்முடி விளக்கம்.

பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை என அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார்…

ஜெயலலிதா பெயரை நீக்குவது எங்கள் நோக்கமில்லை.

இசை மற்றும் மீன்வளப் பல்கலைகழகத்துக்கு வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பெயரை மாற்றவில்லை.

உயிருடன் இருக்கும்போது பெயர் வைக்கக்கூடாது என விதி இருக்கும்போது அம்மா உணவகம் என பெயர் வைத்தது யார்?

கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் கலைஞரின் பெயரை மாற்றியது அதிமுகதான்-

இவ்வாறு அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்…