Mon. May 20th, 2024

கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விடுத்துள்ள அறிக்கையின் விவரம் இதோ….

ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி, பாஜக.வின் தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, தங்கள் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ஒப்புக் கொள்கிறார். ஆனால், அதை தட்டிக் கேட்க அவருக்கு தைரியமில்லை. குற்றவாளியை விட்டுவிட்டு குற்றத்தை வெளிக் கொண்டு வந்தவர்களை கட்சியை விட்டு நீக்குகிறார்.

பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க முடியாமல் தடுப்பது எது? பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தடுப்பது எது சொந்த கட்சியிலுள்ள பெண்களிடமே பாஜக தலைவர்கள் இவ்வளவு மோசமாக நடந்து கொள்கிறார்கள். அதை அந்த கட்சியின் தலைவர் சிறிதும் வெட்கமும், மனசாட்சியும் இல்லாமல் ஆதரிக்கிறார்.

இன்னும் பல கண்ணியக்குறைவான செய்திகள் தனக்கு தெரியும் என்கிறார். ஒன்றிய இணையமைச்சர் முருகன் தொடர்பாகவும் ஒரு பாலியல் வீடியோ இருப்பதாக மதன் சொல்லும் போது அண்ணாமலை அதை மறுக்கவில்லை. ஆக, அதுவும் அவருக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஒருகட்டத்தில் மிக மோசமாக பேரம் பேசுகிறார்.

இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்து கொண்டிருந்தால் கையில் காலில் விழுந்தாவது பாஜக தலைவர்களை காப்பாற்ற இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்பேன் என்று கூறுகிறார் அண்ணாமல.

அவரை பொறுத்தவரை சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாக வேண்டியவர்கள். அப்படிதானே. அவர்களைப் பற்றி அண்ணாமலைக்கு எந்த அக்கறையும் இல்லை. இதை கேட்கும் போது ஒரு பெண்ணாக ரத்தம் கொதிக்கிறது.

பாஜகவின் மாநில தலைவர் திரு.அண்ணாமலை சொந்த கட்சியில் உள்ள பெண்களின் பாதுகாப்பையும்,கண்ணியத்தையும் உறுதிசெய்ய முடியாதவர்,சாதாரண பெண்களை கிள்ளுக்கீரையாக நினைப்பவர், பாஜக தலைவர்களின் பாலியல் குற்றங்களை கண்டும் காணாமல் கடந்து போகிறவர்,பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக நிற்பவர்.

இதே திரு. அண்ணாமலைதான் தேசம்,தெய்வீகம் என்றெல்லாம் பேசி ஊரை ஏமாற்றிக்கொண்டிருப்பவர். ஆகவே திரு.அண்ணாமலை உடனடியாக தனது பதவியை ராஜினமா செய்ய வேண்டும். தமிழகத்துப் பெண்களை அவமதித்ததற்காக அவர்களிடம் மன்னிப்புக் கேட்கவேண்டும்.

தமிழக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவித்த பாஜகவின் மாநில தலைவர் திரு. அண்ணாமலை உடனடியாக ராஜினமா செய்யவேண்டும்,

இவ்வாறு கரூர் எம்.பி.ஜோதிமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.