Sat. May 4th, 2024

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளு பேத்தி செல்வி, கோவில்பட்டி பசுவந்தனை ரோட்டில் குடியிருந்து வருகிறார். இவர், கோவில்பட்டி லாயல் மில் காலனி அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் முருகானந்தம் வழக்கறிஞராக உள்ளார். இவர்களுக்கு கவிலாஷ் போஸ் என்ற மகனும், மோனிஷா என்ற மகளும் உள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சியின் 150வதுபிறந்த நாள் விழா அரசு சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் என்று கடந்த 15ந்தேதி சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார். இவரது அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்த நிலையில் வ.உ.சி.யின் கொள்ளுபேத்தி செல்வி செய்தியாளர்களிடம் இன்று பேசினார்..

அப்போது அவர் கூறியதாவது:

இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட பல தியாகிகளின், தியாகங்களை தமிழக அரசு நினைவு கூர்ந்துள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார் ஆகியோரின் தியாகங்கள் அடுத்த தலைமுறைக்கும் தெரியும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்து இருப்பது வரவேற்கக்கூடியது.இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி எம்பி திருமதி.கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கோவில்பட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை அமைக்க வேண்டும்.

இவ்வாறு செல்வி கூறினார்.