Sat. May 4th, 2024

பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா அவரது கணவர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கி, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் நேற்று அறிவிப்பு வெளியிட்டனர். கடலூர் மாவட்டஅமைச்சர் எம்.சி. சம்பத்திற்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே அரசியல் செய்தவர் பன்னீர்செல்வம். மேலும், பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில்தான் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் பூர்வீக கிராமம் உள்ளது. அந்த தொகுதியை குறி வைத்தே, சத்யா எம்.எல்.ஏ.வையும், அவரது கணவரையும் அரசியலில் இருந்தே ஓரம் கட்ட காய் நகர்த்தி வந்தார் அமைச்சர்.

2016ல் ஜெயலலிதா மறைந்த பிறகு அமைச்சர் சம்பத்திற்கு எதிராக கோஷ்டி சேர்ந்த முன்னாள் எம்.பி. அருண்மொழித்தேவன், தற்போதைய அதிமுக மாவட்டச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் தஞ்சமடைந்து எம்.சி. சம்பத்தை எதிர்த்து அரசியல் செய்தனர். இவர்கள் அனைவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும் அமைச்சர் சம்பத்திற்கு எதிராக கோஷ்டி அரசியலை முன்னெடுத்தனர். அவர்களை நம்பி, சத்யா எம்.எல்.ஏ எதிர்க்கோஷ்டியில் ஐக்கியமானார். அவர் வன்னியராக இருந்தாலும் கூட அவரது கணவர் பன்னீர்செல்வம் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், அமைச்சர் எம்.சி.சம்பத்தால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டமன்றத் தேர்தலுக்காக பொறுமையாக இருந்தவர், மீண்டும் சத்யா போட்டியிடாத மாதிரி முட்டுக்கட்டை போட்டது மட்டுமின்றி, தேர்தல் முடிந்த பிறகு சத்யா, அவரது கணவர் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுக.வில் நீடிக்கவே முடியாத மாதிரி காய் நகர்த்தி அதில் வெற்றியும் பெற்றுவிட்டார்.

கடலூர் மாவட்ட அரசியலில் தனித்து விடப்பட்ட எம்.எல்.ஏ. சத்யாவும், அவரது கணவர் பன்னீர்செல்வமும், தற்போதைய நிலையில் அமைதி காக்கவே விரும்புவதாகவும், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு, எம்.சி.சம்பத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியலில் வேகம் காட்டுவார்கள் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிமுக.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து, அதிமுக எம்.எல்.ஏ. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் இதோ….

தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிப்பிற்கு பிறகு நாங்கள் அரசியல்
மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டு விட்டோம்.

அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை

ஒவ்வொரு கோயிலாக இறைவனை தரிசிக்க இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம்

நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கழகத்திற்க்கு எதிராகவோ,எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.

நாங்கள் எந்த ஒரு செயல்பாட்டிலும் ஈடுபடவில்லை என்பதை பண்ருட்டி தொகுதி முழுக்க உள்ள அஇஅதிமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பண்ருட்டி தொகுதி மக்கள் உள்பட அனைவருக்குமே தெரியும்

இதற்க்கு நான் வணங்கும் ஈசனும் அம்மாவின் ஆன்மாவும் சாட்சி

இந்நிலையில் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகிய எங்களை

கழக வேட்பாளரை எதிர்த்தும், எதிர்கட்சியினருக்கு ஆதரவாகவும் செயல் பட்டதாக அபாண்டமான பொய்யான குற்றசாட்டை எங்கள் மீது சுமத்தியதுடன் எங்களுடன் நகர ஒன்றிய செயலாளர்கள் உள்பட நால்வரை கழகத்திலிருந்து நீக்குவதாக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது.

கடலூர் சம்பத், சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்,கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

மேலும் உளவுதுறையை தன் கையில் வைத்திருக்கும் அண்ணன் எடப்பாடியார் காவல்துறை அறிக்கையை கேட்டு பெற்று இருந்தாலே உண்மை தெரியும்.

அல்லது அண்ணன் எடப்பாடியார் எங்களையோ பண்ருட்டி தொகுதி கழகத்தினரையோ அழைத்து பேசியிருந்தாலோ உண்மை தெரிந்திருக்கும் . கண்டிப்பாக இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட வாய்ப்பு ஏற்பட்டு இருக்காது.

இந்த அறிவிப்பால் எங்கள் மீது பொய்யான பழி சுமத்தப்பட்டதோடு
எங்களை போன்ற அம்மா வின் உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள்

இதற்கு காலம்தான் பதில் சொல்லும். அம்மா இருந்திருந்தால் எங்களை போன்ற கழக விசுவாசிகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது.

இந்த அறிவிப்பை கழக தொண்டர்களும்,பொதுமக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

உண்மையாகவே கழக விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் அரசியல்
சூன்யகாரர்களான கடலூர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன்,கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர்களை நான் வணங்கும் ஈசனும்
அம்மாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது

கழகத்திற்க்கு விசுவாசமான உண்மையான கழக தொண்டர்கள் வயிறுஎரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள்

தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களை போன்ற உண்மையான அம்மா விசுவாசிகளை கழகம் இழந்து கொண்டே போனால் கழகத்தின் நிலை?

பொறுத்திருப்போம்

காலம் பதில் சொல்லும்

இந்த செயல்பாடு விதி என்றிருப்போம். நல்லோர்க்கு நல்லதே நடக்கும்.

இவ்வாறு பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக பொருளார் துரைமுருகனும், அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணியும் சாதிப் பாசத்தில் கொஞ்சி குலாவிக் கொண்டு, பிற சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல் நிர்வாகிகளை பழிவாங்கி வருவதாக ஒரு குற்றச்சாட்டு நிரந்தரமாக உண்டு. அது உண்மை என்று நிரூபிக்கும் வகையில்தான் அண்மையில் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில், அமைச்சர் கே.சி.வீரமணிக்கும், திமுக பொருளாளர் துரைமுருகனுக்கும் இடையே உள்ள நெருக்கத்தை, கண்ணீர் மல்க கதறியவாறே ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அதே நிலைதான் இப்போது கடலூர் மாவட்டத்திலும் உருவாகியிருக்கிறது.