Sun. May 19th, 2024
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்டார். திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பெண்களை அவமரியாதையாக பேசி வருகின்றனர். கடவுளே, தப்பித்தவறி அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தில் உள்ள பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற அச்சம் எழுகிறது. நாமெல்லாம் பெரிதும் மதிக்கக் கூடிய முதல்வர் பழனிசாமியின் தாயாரை, காலாவதியான 2ஜி ஏவுகணை அநாகரிமாக பேசுகிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெண்கள் முன்னேற்றம் என்பதே இருக்காது. 
1989 ஆம் ஆண்டு அம்மா ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் திமுக.வினரால் நிகழ்த்தப்பட்ட வன்முறையை மறந்து விடாதீர்கள். 


தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வளர்ச்சி ஒன்றே இலக்கு. ஆனால், காங்கிரஸ் மற்றும் திமுக.வுக்கு வம்ச வளர்ச்சி ஒன்றுதான் லட்சியம். மத்திய பாஜக ஆட்சியில், எண்ணற்ற தொழில்துறை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கோவை மண்டலமே தொழில் நகரமாக மாற்றியமைத்த இந்த மக்களுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன். 
மாநிலமும் நாடும் வளர்ச்சிப் பெற வேண்டும். முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் தமிழகத்தில் தேசிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி அமைய வேண்டும். 
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.