Thu. Apr 18th, 2024

டெல்டா, ஓமிக்ரான் ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களால் கிருமி தொற்று, உயிரிழப்பு ஆகியவற்றின் உலகளாவிய விகிதம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், டெல்டா மற்றும் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா வகைகள் ஆகிய இரட்டை அச்சுறுத்தல்களை உலக நாடுகள் எதிர்கொண்டுள்ளன என்றார்..

தொடர்ந்து அவர் கூறியதாவது:

தொற்றின் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.  

இந்த ஒரு வாரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் வைரஸ் பாதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

இதே வேகத்தில் தொற்று பரவினால், டெல்டா மற்றும் ஒமிக்ரான் திரிபுகளால் உலகில் கொரோனா சுனாமி அலை ஏற்படும்.

2022ன் நடுப்பகுதிக்குள் அனைத்து நாடுகளிலும் குறைந்தது 70 சதவிகித பேருக்கு வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை நாம் புத்தாண்டு உறுதிமொழியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

உலகின் பணக்கார நாடுகள் மாஸ்க், சிகிச்சை கருவிகள், நோயறிதல் கருவிகள் மற்றும் வேக்சின் போன்றவற்றைப் பதுக்கி வைத்துக் கொள்கின்றன.

இது அடுத்தடுத்த புதிய வகை கொரோனா உருவாகக் காரணமாகி பேரபாயத்திற்கு வழிவகை செய்கிறது.

வேக்சின் போட்டுக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இதன் காரணமாகவே தற்போது கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது.

2020ம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சுமார் 18 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு 35 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், உண்மையான எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் .இவ்வாறு அவர் கூறினார்.