Sun. May 5th, 2024

சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் மற்றும் குரு பூஜை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதியன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனையொட்டி இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவச்சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மதுரையில் இருந்து புறப்பட்டு வந்த முதல்வர், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தெப்பக்குளம் வந்த முதல்வர், அங்கிருந்த மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்வரின் வருகையையொட்டி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக மரியாதை

சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேவர் திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.