Sun. May 19th, 2024

தமிழக மீனவர்கள் மீது சிங்களப்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது என பாமக இளைஞரணி தலைவரும் மருத்துவருமான அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இதோ….வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. சிங்களப் படையினரின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது!

சிங்களப் படையினரின் தாக்குதலில் நல்வாய்ப்பாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பி விட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்து விட்டது. சிங்களப் படையினரின் இந்த செயலை இந்திய அரசு கண்டிப்பதுடன், சேதமடைந்த படகு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்!

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.