Fri. Apr 11th, 2025

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர் பாண்டியன் சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் நிர்வாகிகளை சந்தித்துபேச வந்திருந்தார்.

பின்னர் பரமக்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

வைகை பாசன பகுதி வறண்டு கிடக்கிறது. விளைநிலங்கள் முழுமையையும் கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கிறது. இனி சாகுபடி செய்ய முடியுமா? என்கிற கேள்வி ஏற்பட்டிருக்கிறது.

குறிப்பாக மதுரை கீழ்பகுதியில் ராமநாதபுரம் வரையிலும் 45 கிலோ மீட்டர் தூரம் வைகை ஆறு முழுமையும் மணல் கொள்ளை அடிக்கப்பட்டதால் வண்டல் மண் மேடிட்டு கருவேலமரங்கள் மண்டி உள்ளது.இவற்றை அகற்றி தூர்வாரி கரைகளை பலப்படுத்திட தமிழக அரசு முன்வர வேண்டும்.

ஆர்எஸ் மங்கலம் கால்வாய் வரையிலும் வைகை பாசனத்தில் பாசனம் பெறுவதற்கான உத்திரவாதத்தை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் பாசனத்திற்கென தனிக் கொள்கை வகுத்து இன்றைய நிலைக்கு தேவையை கருத்தில் கொண்டு புதிய பாசன முறைகளை வகுத்து அதற்கான அரசாணைகள் பிறப்பிக்க வேண்டியது தேவையாகிறது.

உடனடியாக தமிழ்நாட்டுக்குள் நீர்ப்பாசன பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தனி நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும்.

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வைகை பாசனத்தை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும் மிளகாய் நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு 2020-21ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் என்றார்.

மதுரை மண்டல தலைவர் மதுரை வீரன் கௌரவத் தலைவர் ஆதிமூலம் மதுரை மாவட்ட செயலாளர் மேலூர்அருண் சிவகங்கை மாவட்ட செயலாளர் மானாமதுரை முருகன் உயர்மட்ட குழு உறுப்பினர் சுதாதர்மலிங்கம் தஞ்சாவூர் மாநகர தலைவர் பழனியப்பன் திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.