மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் சிறு துறைமுகங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துகிறோம் என்று சொல்லி மாநில அரசுகளின் அதிகாரத்தைக் குறைக்க ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள புதிய சட்டமுன்வடிவை எதிர்க்க முன்வருமாறு 9 கடலோர மாநில முதலமைச்சர்களுக்குக் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம், கேரளம், ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 9 கடலோர மாநில முதலவர்களுக்கு முதலவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடித விவரம் இதோ…
மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களை முறைப்படுத்துவதற்கு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘இந்திய துறைமுக மசோதா 2021’-ஐ உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக கருத்துகளை கேட்பதற்காக ஜூன் 24 அன்று மாநில முதலமைச்சர்களின் கூட்டத்திற்கு கடல்சார் மாநில மேம்பாட்டு கவுன்சில் (MSDC) அழைப்பு விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள இந்திய துறைமுகங்கள் சட்டம் 1908-ன்படி, திட்டமிடல், மேம்பாடு, ஒழுங்குபடுத்துதல், சிறு துறைமுகங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
அதற்கு மாறாக புதிய மசோதா உள்ளது. மாநிலங்களிடம் இருந்து வரும் அதிகாரங்களை எம்.எஸ்.டி.சி-க்கு மாற்றுவதாக அமைந்துள்ளது. இதுவரை ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே எம்.எஸ்.டி.சி உள்ளது. புதிய சட்டமுன்வரைவில் மாநில அரசின் அதிகாரங்கள் பல ஒன்றிய அரசுக்குச் செல்லும் வகையில் புதிய மசோதா அமைந்துள்ளது.
ஏற்கெனவே உள்ள சட்டம், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். ஆனால், புதிய மசோதா சிறு துறைமுகங்களை நிர்வகித்தலில், நீண்டகால பாதகமான விளைவுகளை உருவாக்கும்.
ஏனெனில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டால் மாநில அரசு இதில் எந்தவொரு முக்கியப் பங்கையும் ஆற்ற முடியாது. நாங்கள் ஏற்கெனவே இந்த விவகாரத்தை ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்திடம் கொண்டுசென்றுள்ளோம். மாநிலத் தன்னாட்சியை இதன் மூலம் குறைப்பதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனவே, இப்புதிய மசோதாவுக்கு அனைத்துக் கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இப்புதிய மசோதாவுக்கு எம்.எஸ்.டி.சி கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிற மாநில முதல்வர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.