பொதுசேவையில் ஈடுபடுவதற்கு தனித்த தைரியம் வேண்டும். அதுவும் கம்யூனிஸ்ட் போன்ற இயக்கங்களில் மக்கள் சேவையாற்றுவது என்பது அசாத்தியமானது. அந்தவகையில், கேரளாவில் இரண்டு முறை அமைச்சராக இருந்த ஷைலாஜாவின் புகழ் உலகம் முழுவதும் பேசப்பட்டாலும், கேரளாவில் அமையவுள்ள புதிய அரசில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்காக அவர் துளியும் வருத்தம் கொள்ளவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
புதிய தலைமுறையினரும் திறமையானவர்கள்தான். அவர்களும் மக்களை சேவையை திறம்பட ஆற்றுவார்கள் என்று திருக்குறளைப் போல இரண்டு வரிகளில் தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் ஷைலஜா டீச்சர்.
அவரின் கடந்த கால அரசியல் வாழ்க்கையை சுருக்கமாக பார்ப்போம்…
முதல்வர் பினராய் விஜயன் தவிர கேரள எல்லை கடந்து பரிச்சயமான முகம், அங்கே சுகாதார அமைச்சராக இருந்த ஷைலாஜா டீச்சர் என அறியப்படும் கே.கே. ஷைலஜா. நிபா வைரஸ் தொற்று மற்றும் கொரோனா முதல் அலையின் போது உயிரிழப்புகளைக் கட்டுக்குள் வைத்திருந்ததிலும் நிலைமைகளைக் கையாண்ட விதத்திலும் எல்லைகள் கடந்து அறியப்பட்டார்.
தேசிய அளவிலும் பன்னாட்டு அளவிலும்கூட கவனம் ஈர்த்தார். லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல இதழ் ஒன்று “2020-ம் ஆண்டின் சிறந்த சிந்தனையாளர்” என்று ஷைலஜா டீச்சரை தேர்வு செய்து கௌரவித்தது. இரண்டு வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில், முன்னுதாரணத்துடன்கூடிய மருத்துவத் துறை செயல்பாடுகளைக் கட்டமைத்தார் என்ற வகையில் ஷைலஜா டீச்சர் பரலவலாகப் பாராட்டுகளைப் பெற்றார்.
தொற்று நோய் நிவாரண நிர்வாகத்தில் “கேரள மாடல்” என்று பேசப்படும் அளவுக்கு தனிப் பெருமை சேர்த்தார்.இந்த முறை, சட்டப்பேரவைத் தேர்தலில் கேரளத்திலேயே அதிக வாக்கு எண்ணிக்கையில் ஷைலஜா டீச்சர் வெற்றிபெற்றார். கொரோனா இரண்டாவது அலையில், பிற மாநிலங்களைப் போல கேரளமும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அதைத் திறமையாகக் கையாள மறுபடியும் ஷைலஜா டீச்சர் சுகாதாரத் துறை அமைச்சராக வருவார் என்று எதிர்பார்த்தார்கள்.
பினராய் அவருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இது மாநிலத்தில் பரவலாக விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. சி.பி.எம். கட்சியின் மாநில, தேசியத் தலைமையிலும்கூட அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக செய்திகள் பதிவாகியிருக்கின்றன.
சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைவரான விஜயராகவனின் மனைவி பிந்துவுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டிருக்கிறது. தவிர, முதல்வர் பினராய் விஜயன் இந்த முறை மூன்று பெண்களுக்கு அமைச்சரவையில் இடமளித்திருக்கிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.எல்லாம் சரி.
நாள் ஒன்றுக்கு 43,000 பேருக்கு கொரோனோ தொற்று என்ற எண்ணிக்கையைத் தொடுமளவுக்கு கேரளத்தின் நிலவரம் தீவிரமாக இருக்கிறது. இந்த நிலைமையையும் பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டாவது, ஏற்கெனவே அனுபவமிக்க ஷைலாஜா டீச்சரை மீண்டும் பினராய் பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தும் கேரளாவில் பரவலாக எழுந்து கொண்டே இருக்கிறது.
அரசியலில் பெண்களின் முன்னேற்றத்தையும் எழுச்சியையும் உரக்கப் பேசும் சி.பி.எம். இந்த வாய்ப்பை அது கருதியாவது பயன்படுத்தியிருக்கலாம்.மக்கள்தான் முதன்மை என்று தொடர்ந்து பேசும் சி.பி.எம். அதே மக்கள் ஏகோபித்த ஆதரவுடன், எதிர்பார்ப்புடன் தேர்ந்தெடுத்தவரை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்திருக்கலாம்.அன்றிலிருந்து இன்று வரை, இடதுசாரிகளுக்கு காப்புக் கவசம் போல, “தனிநபரைவிட அமைப்புதான் முக்கியமானது” என்ற முழக்கம் உயிர்ப்புடனே இருக்கிறது.
கம்யூனிஸ்ட்டின் கொள்கையை மீறியும் ஷைலஜா டீச்சரின் பெயரும், அவரின் மனிதநேயமிக்க செயல்பாடுகளும் கேரள மக்களால் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருப்பதே, ஷைலஜா டீச்சருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்…அரசியலில் ஈடுபடும் பெண்களுக்கு ஷைலஜா டீச்சர் ஒரு சிறந்த ரோல் மாடல்….