Thu. May 2nd, 2024

கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. நிர்ப்பந்தம் செய்யவில்லை என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், பணிவாக இருப்பது போல் மக்களை ஏமாற்றி வருகிறார் ஓ.பி.எஸ் என்றும், மூன்று முறை முதலமைச்சர் ஆக வாய்ப்புக் கிடைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கூட்டணி கட்சிகளை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என நிர்பந்திக்கவில்லை என்று கூறிய அவர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நிர்பந்திக்கிறோம் என்பது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த சதி என்று மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக கூட்டணி என்பது எண்ணிக்கை அடிப்படையில் அமைந்தது அல்ல, ஒருமித்த எண்ணங்களின் அடிப்படையில் அமைந்தது என்று உறுதிபட தெரிவித்த அவர், திமுக ஆட்சி வந்தவுடன் மாவட்டந்தோறும் மகளிருக்கென தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கூறினார்.