Fri. Apr 26th, 2024

சென்னையில் புத்தாண்டு என்றாலே மெரினா பீச், பெசன்ட்நகர் பீச், ஈ.சி.ஆர் ரோடு போன்ற இடங்களில் பல்லாயிரக் கணக்கில் இளைஞர்கள் கூடி கும்மாளமிடுவார்கள். மேலும் ரோமியோக்கள் ரேஸ் என்ற பெயரில் குடித்துவிட்டு மதுபோதையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்கள் ஏற்படுத்துவதும் வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை காவல்துறை சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் போகும் வழிகளில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இரவு 10 மணிக்கு மேல் ஓட்டல்கள் எல்லாம் மூடிவிட வேண்டும் என்ற உத்தரவையும் வெற்றிகரமாக செயல்படுத்தினர். 10 மணிக்கு மேல் பைக்கில் சென்ற ரோமியோக்களுக்கு எல்லாம் சிறப்பான கவனிப்புகளை கொடுத்து அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நள்ளிரவில் குடும்பத்தினருடன் கோவில்களுக்கும், தேவாலயங்களுக்கும் சென்றவர்களை எந்தவித கட்டுப்பாடின்றி அனுமதித்தனர். சென்னை பெருநகர காவல்துறையினரின் சிறப்பான முன்னேற்பாடுகளாலும், கட்டுப்பாடுகளாலும் இந்த புத்தாண்டு எவ்வித அசம்பாவிதங்கள் இல்லாத புத்தாண்டாக பிறந்தது.